பெங்களூரு: தன்னுடைய காதலனின் கைப்பேசியிலுள்ள படச்சேமிப்பகத்தைத் திறந்து பார்த்தபோது 22 வயதுப் பெண்ணுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.
அதில் பெண்களின் 13,000 நிர்வாணப் படங்கள் இருந்தன. அவற்றுள் அந்த இளம்பெண்ணுடையதும் சக பெண் ஊழியர்களுடையதும் அடங்கும்.
அவர்கள் இருவரும் இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதனையடுத்து, கவலையுற்ற காஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அந்த ஆடவருடனான உறவை முறித்துக்கொண்டார். அத்துடன், சக பெண் ஊழியர்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படலாம் என்பதால், அந்த ஆடவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி இம்மாதம் 20ஆம் தேதி தமது மூத்த ஊழியர்களுக்கும் அதுபற்றித் தகவல் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் சட்டப் பிரிவுத் தலைவர் இம்மாதம் 23ஆம் தேதி காவல்துறையின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஆதித்ய சந்தோஷ், 25, என்ற அந்த ஆடவர்மீது புகார் அளித்தார்.
கடந்த நான்கு மாதங்களாக காஞ்சனாவுடன் சந்தோஷ் உறவில் இருந்ததாகவும் தாங்கள் இருவரும் நெருக்கமாக இருந்த தருணங்களை சந்தோஷ் கைப்பேசியில் பதிவுசெய்ததாகவும் கூறப்படுகிறது.
அவற்றையெல்லாம் சந்தோஷின் கைப்பேசியிலிருந்து அழிக்க விரும்பிய காஞ்சனா, அதற்காக சந்தோஷுக்குத் தெரியாமல் அவரது கைப்பேசியை எடுத்துப் பார்த்தபோது, அவரது இழிசெயல் வெளிச்சத்திற்கு வந்தது.