உத்தரப் பிரதேசம்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அவசர மருத்துவ வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நோயாளியை வெளியே தள்ளிவிட்டு, அவரது மனைவியை அவ்வாகன ஓட்டுநரும் உதவியாளரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஸிபூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நோயாளி ஒருவர் சேர்க்கப்பட்டிருந்தார். அவரை வீட்டுக்கு அழைத்துசெல்ல அவரது மனைவி அவசர மருத்துவ வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்தார்.
சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள தங்களது வீட்டுக்கு கணவரை அவசர மருத்துவ வாகனத்தில் கொண்டுசென்றபோது, பாதியிலேயே அவ்வாகனத்தை நிறுத்திய ஓட்டுநரும் உதவியாளரும் அந்த மாதை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினர்.
இதனால் சத்தம் போட்ட நோயாளியை மருத்துவ வாகனத்திலிருந்து வெளியே தள்ளி, அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த சுவாசக் கருவிகளையும் அவர்கள் பிடுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்பில் காவல் நிலையத்தில் புகார் செய்துவிட்டு, கணவரை மற்றொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக அந்த மாது கூறினார்.
சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவசர மருத்துவ வாகன ஓட்டுநரையும் உதவியாளரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

