கோரக்பூர்: அதிகாலைப் பொழுதில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த கணவன்மீது வெந்நீரை ஊற்றிய மனைவி, பின்னர் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து அவரை அடித்து உதைத்து, மாடியிலிருந்து தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
இச்சம்பவம் இம்மாதம் 13ஆம் தேதி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அருகிலுள்ள தேவ்ரியா எனும் ஊரில் நடந்தது.
தன் மாமனார், மாமியாரைப் பார்க்க அவர்களது வீட்டிற்குச் சென்றிருந்தபோது அந்த ஆடவர் இப்படிக் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
அம்ரிதா ராய் என்ற அப்பெண், தன் கணவரான ஆஷிஷ் குமார் ராய் இன்னொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாகச் சந்தேகப்பட்டார்.
“மாமனார் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு அவர்கள் என் கைப்பேசியையும் என் மோட்டார்சைக்கிள் சாவியையும் பறித்து வைத்துக்கொண்டனர். சாவியைக் கேட்டபோது இரவு தங்கிவிட்டுச் செல்லுமாறு கூறினர். நானும் சரி என்றேன். பின் எல்லாரும் உறங்கச் சென்றோம்.
“விடிகாலை 3 மணியளவில், கழிவறைக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு என் மனைவி சென்றார். அவருடைய சகோதரி வெந்நீரைத் தயாராக வைத்திருந்தார். பின்னர் உறங்கிக்கொண்டிருந்த என்மீது வெந்நீரை ஊற்றினர். பதறியடித்து எழுந்த நான் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது, அவர்கள் என்னைப் பிடித்துக்கொண்டு அடித்து உதைத்தனர். பின்னர் மாடியிலிருந்து தள்ளிவிட்டனர்,” என்று ஆஷிஷ் விவரித்தார்.
இதனையடுத்து, அம்ரிதாவைக் கைதுசெய்த காவல்துறை, அவர்மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.