புதுடெல்லி: விடுமுறைக்கு வெளிநாட்டிற்குக் கூட்டிச் செல்ல மறுத்த கணவனை மனைவி முகத்தில் குத்திக் கொலைசெய்தார்.
இச்சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்தது.
நிகில் கண்ணா, 36, என்ற அந்த ஆடவர் கட்டுமானத் தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அவர் ரேணுகா என்ற பெண்ணைக் காதலித்து, ஆறாண்டுகளுக்குமுன் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், தனது பிறந்தநாளைக் கொண்டாட தன்னை துபாய்க்கு அழைத்துச் செல்லும்படி நிகிலிடம் ரேணுகா கூறினார். அதற்கு நிகில் உடன்படவில்லை. திருமண நாள் போன்ற மற்ற முக்கிய நாள்களின்போதும் தனக்கு விலையுயர்ந்த பரிசுப்பொருள்கள் வாங்கித் தரவில்லை என்று நிகிலிடம் ரேணுகா சண்டைபோட்டார். அத்துடன், தன் உறவினர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக டெல்லி செல்ல ரேணுகா விரும்பினார். அதற்கும் கணவர் நிகில் சரியான பதில் கூறாததால் ரேணுகா கோபத்தில் இருந்தார்,” என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் விளக்கினார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இருவர்க்கும் இடையே சண்டை மூண்டது. அப்போது, நிகிலின் மூக்கில் ரேணுகா குத்தினார். குத்து வலுவாக இருந்ததால் நிகிலின் மூக்கும் சில பற்களும் உடைந்தன. இதனால் அதிக அளவில் ரத்தம் கொட்ட, அவ்விடத்திலேயே நிகில் மயங்கி விழுந்தார்.
விசாரணைக்குப்பின் ரேணுகாவைக் காவல்துறை கைதுசெய்தது.