தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குலுக்கலில் ரூ.1 கோடி வென்ற சாலையோர பெண் வியாபாரியை ஏமாற்றிய லாட்டரி விற்பனையாளர் கைது

2 mins read
8214d7c4-88c6-439e-9488-20748f47a890
சாலையோர வியாபாரியான சுகுமாரியம்மா, 72. - படம்: ஆன்லைன் மனோரமா

திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் தெருவோரக் கடை ஒன்றை நடத்தி வருபவர் சுகுமாரியம்மா, 72. இவர் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

தற்போது பிழைப்புக்காக அப்பகுதியில் தெருவோரக் கடை நடத்தி வரும் இவருக்கு அடிக்கடி லாட்டரிச்சீட்டு வாங்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் மே 15ஆம் தேதி நடைபெற்ற குலுக்கலில் இவர் வாங்கிய எஃப்ஜி. 348822 என்ற எண் வரிசை கொண்ட சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. ஆனால் லாட்டரி முடிவைப் பார்க்கத் தெரியாத இந்த மூதாட்டிக்கு முதல் பரிசு கிடைத்த செய்தி தெரியவில்லை.

இதற்கிடையே, திருவாட்டி சுகுமாரியம்மாவிடம் லாட்டரிச் சீட்டை விற்ற கண்ணன் என்ற லாட்டரி விற்பனையாளர், “உங்கள் சீட்டிற்கு ரூ.500 ரூபாய் பரிசு அடித்துள்ளது,” எனக் கூறி மொத்த சீட்டுகளையும் வாங்கிச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்த அவர், “தவறாகச் சொல்லிவிட்டேன் பரிசு எதுவும் விழவில்லை. ரூ.100 வைத்துக்கொள்ளுங்கள்,” எனக் கூறி அதைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

முதல் பரிசுத்தொகை வென்ற குலுக்கல் சீட்டுடன் தம் சொந்த ஊருக்குச் சென்ற கண்ணன், தமக்கு ரூ.1 கோடி அடித்ததாகக் கூறி அங்கிருந்தவர்களுக்கு லட்டு கொடுத்து கொண்டாடியிருக்கிறார்.

கண்ணன் லாட்டரி விற்கும் பாளையம் பகுதியில் லாட்டரிக் கடை வைத்திருக்கும் ராதாகிருஷ்ணன் என்பவர், தம் நண்பரும் லாட்டரிக் கடை வைத்திருப்பவருமான பிரபா என்பவரிடம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

பிரபாவிற்கு சுகுமாரியம்மாவை நன்றாகத் தெரியும். இதனால், சந்தேகம் அடைந்த பிரபா, சுகுமாரியம்மாவிடம் இது குறித்து விசாரித்து இருக்கிறார். அப்போதுதான், சுகுமாரியம்மா ஏமாற்றப்பட்ட விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து சுகுமாரியம்மா நடந்த விஷயம் குறித்து லாட்டரி துறையிடம் புகார் அளித்துள்ளார். காவல்துறையிடம் புகார் அளிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியதை அடுத்து, சுகுமாரியம்மா காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தலைமறைவாக இருந்த கண்ணனை கைது செய்தனர்.

சுகுமாரியம்மாவை ஏமாற்றியதை கண்ணன் ஒப்புக்கொண்டதை அடுத்து, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

“சொந்தமாக ஓர் இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பதுதான் எனது கனவு. எனக்கு விரைவில் பரிசுத்தொகை கிடைக்கும் என நம்புகிறேன்,” என்று சுகுமாரியம்மா கூறினார்.

குறிப்புச் சொற்கள்