புவனேஸ்வர்: ஈன்ற தாயை மகனே மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் பேரதிர்ச்சி அளித்துள்ளது.
இச்சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலம், கியோஞ்சர் மாவட்டத்தில் நிகழ்ந்தது.
அந்த 70 வயதுப் பெண் தன் மகனின் விளைநிலத்திலிருந்து காலிஃபிளவரைப் பறித்ததுதான் இதற்குக் காரணம்.
சரசபாசி எனும் சிற்றூரைச் சேர்ந்த அவர், தன் இளைய மகனின் விளைநிலத்திலிருந்து காலிஃபிளவரைப் பறித்து உண்டுவிட்டார். இதனையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றவே, அந்த ஆடவர் தன் தாயை மின்கம்பத்தில் கட்டிப்போட்டு, அடி விளாசியதாகக் கூறப்படுகிறது.
விலக்கிவிடச் சென்ற ஊர்க்காரர்களையும் அந்த ஆடவர் மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.
பின்னர் அப்பெண்ணை மீட்ட ஊர்க்காரர்கள், அவரை அருகிலிருந்த சமூக சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விவரம் கேட்டறிந்த காவல்துறை, அவருடைய இளைய மகன்மீது வழக்குப் பதிந்தது.

