லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமூக ஊடகத்திற்கு அடிமையான பெண் ஒருவர் தவறுதலாகத் தமக்குத் தாமே தூக்கு மாட்டியதில் உயிரிழந்தார்.
இன்ஸ்டகிராம் ரீல் எடுப்பதற்காகத் தமது வீட்டில் தூக்கு மாட்டியதைப் போல பாவனை செய்ய முயன்றபோது தூக்குக் கயிறு அந்தப் பெண்ணின் கழுத்தை இறுக்கியது. அடுத்த சில நொடிகளில் அவர் உயிரிழந்தார்.
அந்தப் பெண் 27 வயது மோகினி என்று அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
நாற்காலி ஒன்றில் ஏறி தூக்குக் கயிற்றைத் தமது கழுத்தில் சுற்றியவாறே தமது கைப்பேசியில் மோகினி படம் எடுத்துக் கொண்டிருந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஆயினும், நாற்காலி சறுக்கியதா அல்லது மோகினி தடுமாறினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றனர் அவர்கள். காரணம், அவர் ரீல் எடுத்துக்கொண்டிருந்தபோது அருகில் யாரும் இல்லை.
அந்தப் பெண்ணின் நான்கு வயது மகள் வீட்டிற்குள் நுழைந்தபோதுதான் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தமது தாய் தூக்குக் கயிற்றில் சடலமாகத் தொங்கியதைக் கண்ட அச்சிறுமி அலறினார்.
சமூக ஊடகத்துக்கு அடிமையாகி அதிலேயே ஊறித் திளைத்ததன் காரணமாக உயிரையே பறிகொடுக்கும் நிலை உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது.
மோகினியின் சடலத்தைத் தூக்குக் கயிற்றில் இருந்து இறக்கிய காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

