ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 18 முதல் 50 வயது வரையில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அரசு வழங்கி வந்தது.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்றார்.
பதவி ஏற்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், “ஜார்க்கண்ட் மாநிலத்தில் டிசம்பர் மாதம் முதல் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகையாக வழங்கப்படும்,” என்றார்.
இந்த நிலையில் இது தொடர்பான முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 49 வயதான ஹேமந்த் சோரன் ஜார்க்கண்டின் முதல்வராக 4வது முறையாகப் பதவி ஏற்றுள்ளார்.
இந்தத் தேர்தலில் பர்ஹைட் தொகுதியில் போட்டியிட்ட அவர், 39,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.