உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் பீகாரில் நிறுவப்பட்டது

2 mins read
bd51f79a-2877-4f50-8a30-41931398c060
மாமல்லபுரத்திலிருந்து 2,500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, பீகாரில் குடிகொண்ட உலகின் ஆகப் பெரிய சிவலிங்கம். - படம்: எம்எஸ்என்
multi-img1 of 3

பீகார்: மகாபலிபுரத்தில் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் பீகாரில் சனிக்கிழமை (ஜனவரி 17) வேத மந்திரங்கள் முழங்க நிறுவப்பட்டது.

பீகாரின் கிழக்கு சம்​பாரன் மாவட்​டம் கேசரியா நகரில் கட்டப்பட்டு வரும் விராட் ராமாயணக் கோயிலில் நிறுவப்பட்டுள்ள இந்தச் சிவலிங்கம் 33 அடி உயரமும் 210 டன் எடையும் கொண்டது.

மாமல்லபுரம், பட்​டிக்​காடு கிராமத்​தைச் சேர்ந்த சிற்​பக் கலைஞர்​களின் 10 ஆண்டு கால உழைப்பில் இச்சிவலிங்கம் உருவாகியுள்ளது. மாமல்​லபுரத்​திலிருந்து 96 சக்​கரங்​கள் கொண்ட லாரி மூலம் கிட்டத்தட்ட 47 நாட்​கள் பயணத்​துக்குப் பிறகு லிங்கம் கேசரி​யாவைச் சென்றடைந்​தது. அந்​தப் பயணத்​தின்​ போது லாரி எங்கு நின்​றாலும் லிங்கத்தைப் பார்க்க பெரும் கூட்​டம் கூடியது.

ஹரித்​வார், பிர​யாக்​ராஜ், கங்​கோத்​ரி, கைலாஷ் மானசரோவர், சோன்​பூர் ஆகிய இடங்​களில் இருந்து ஐந்து நதி​களின் நீர் சிவலிங்​கத்​தின் அபிஷேகத்​துக்காகக் கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது.

‘சஹஸ்​ரலிங்​கம்’ என அழைக்​கப்​படும் இந்தச் சிவலிங்கத்தில் 1,008 சிறிய லிங்​கங்​கள் செதுக்​கப்​பட்​டுள்​ளன. இந்த லிங்​கத்துக்கு நீர் அபிஷேகம் செய்​தால் 1,008 சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்த புண்​ணி​யம் கிடைக்​கும் என்​பது நம்​பிக்​கை.

30 அடி உயரக் கோபுரத்தின் மீது நிறுவப்பட்டுள்ளதால், தரையில் இருந்து லிங்கத்தின் மொத்த உயரம் 60 அடிக்கும் மேல் இருக்கும். இரு மிகப் பெரிய பாரந்தூக்கிகளின் உதவியுடன் ஏறக்குறைய அரை மணி நேரத்தில் பொறியாளர்கள் குழுவினர் இதனை நிறுவினர்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் மஹாவீர் அறக்கட்டளையின் முன்னாள் செயலாளருமான மறைந்த ஆச்சார்யா குணால் கிஷோரின் கனவுத் திட்டமே விராட் ராமாயணக் கோயில். 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் வளாகத்தில், அவரது மகன் சயான் குணால் தற்போது சடங்கு சம்பிரதாயங்களுடன் சிவலிங்கத்தை நிறுவிச் செய்துள்ளார். அக்கோயில் 2,800 அடி நீள​மும் 1,400 அடி அகல​மும் கொண்​ட​து. அயோத்திக்கு அடுத்தபடியாக இது மிக முக்கிய ஆன்மீகத் தலமாக மாறும் என்றும், இதன் மூலம் உள்ளூர் பகுதியில் விமான நிலையம், நெடுஞ்சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் மேம்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிவலிங்கம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அப்பகுதிக்கு நேரில் சென்று கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். “இந்த பிரம்மாண்டத் திட்டம் ராமாயணச் சுற்றுலாவிற்குப் பெரிய பலத்தைச் சேர்க்கும்” என்று துணை முதலமைச்சர் விஜய் சின்ஹா பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோயில் வளாகத்தில் சிவலிங்கம் நிறுவப்பட்டதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப்பகுதியில் திரண்டதால் அந்த இடமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்