காசி: உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பேலுபூர் பகுதியில் உலகின் ஆகப்பெரிய சிவலிங்கம் நிறுவப்பட உள்ளது.
அங்கு நூறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள பிரம்மாண்டப் பூங்காவில் 130 அடி உயரம் கொண்ட அந்தச் சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள புனித நகரங்களில் ஒன்று வாரணாசி. இந்தியப் பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான அங்கு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் வாரணாசி மாநகராட்சி சார்பில் உருவாகும் ‘சிவ தீம் பார்க்’ என்ற பூங்கா திட்டமும் ஒன்றாகும்.
20 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட நடைபாதை, குழந்தைகளுக்கான நவீன ஊஞ்சல்கள், திறந்தவெளிக் கலைக்கூடம், முதியோர் நூலகம், மிகப்பெரிய வாகன நிறுத்துமிடம், உணவரங்கம் என அனைத்து வசதிகளுடனும் அமைய உள்ள இந்தப் பூங்கா, அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் முழுமை பெறும் எனக் கூறப்படுகிறது.
கேரளாவில் ஏற்கெனவே 111 அடி உயரத்தில் மகாலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதை விஞ்சும் வகையில், வாரணாசியில் சிவலிங்கம் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், அழகான சுற்றுச்சூழல், அறிவியல், நகர்ப்புறச் சுற்றுலாவுக்கான மையமாகவும் அப்பூங்கா அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளையர்கள், சிறார்களைக் கவரும் வகையில் கோளரங்கம், காசியின் தொன்மையான பாரம்பரியம், வரலாற்றை விவரிக்கும் நவீன மின்னிலக்க அருங்காட்சியகம் ஆகியவையும் அப்பூங்காவில் இடம்பெற உள்ளன.

