சென்னை: திருவாரூரைச் சேர்ந்த 34 வயது பார்த்திபனுக்கு கடந்த ஜனவரியில் முதுகு, வயிற்றுப் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது.
மின்கருவித் தொழில்நுட்பராகப் பணியாற்றும் பார்த்திபன், கடும் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சோதனைக்காகச் சென்றார். அவருக்குப் பெருந்தமனி வெடித்து 1.5 லிட்டர் ரத்தம் கசிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு ரூ.15 லட்சம் முன்பணம் கேட்கப்பட்டது. உயிர் பிழைக்க உத்தரவாதம் இல்லை என்றும் கூறப்பட்ட நிலையில் பார்த்திபன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையை அணுகினார்.
அம்மருத்துவமனையின் ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் உடனடியாகச் செயல்பட்டனர். ‘கேத் லேப்’ வசதியைப் பயன்படுத்தி, நெஞ்சுக்கூடு முதல் வயிறு வரை பெரிய செயற்கை உறை குழாயைப் (ஸ்டன்ட்) பொருத்தி ரத்தக் கசிவை நிறுத்தினர்
30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை செலவாகும் இந்தச் சிகிச்சை, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் முற்றிலும் இலவசமாகச் செய்யப்பட்டு அவர் உயிர்பிழைத்தார்.

