புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நொய்டாவைச் சேர்ந்த ருச்சிகா சிங் மன்னிப்புக் கோரியுள்ளார்.
தமக்கு 15 வயதே ஆவதாகவும் சக ஆர்ப்பாட்டக்காரர்களால் தூண்டப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
அவருக்கு எதிரான சிறப்பு முதல் தகவல் அறிக்கையை டெல்லி காவல்துறை விசாரிக்கத் தொடங்கிய அடுத்த நாள் ருச்சிகா வெளியிட்ட காணொளியில் அந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்தார். காணொளியில் அவர் தலையைக் குனிந்து கைகளை உயரே தூக்கி மன்னிப்புக் கேட்கிறார்.
“நான் என் நண்பருடன் கனாட் பிளேசுக்குச் சென்றேன். அங்கு ஒரு போராட்டம் நடந்துகொண்டிருந்தது, பல குழுக்கள் கூடியிருந்தன. பிரதமருக்கு எதிரான மோசமான வசவுகள் உட்பட மக்கள் பல கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். என்னையும் ஏதாவது சொல்லச் சொன்னதால் நான் தூண்டப்பட்டேன். நான் ஈர்க்கப்பட்டு பலவற்றைச் சொல்லிவிட்டேன்.
“நான் செய்தது மன்னிக்க முடியாத ஒன்று. நான் மிகவும் மோசமான வார்த்தையைச் சொன்னேன். ஆனால் இதுவே எனது முதலும் கடைசியுமான தவறு. நான் இனி ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டேன். நான் அந்தக் காணொளியை வெளியிடவில்லை. ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் அவர்.
ஆனால் ருச்சிகாவின் இந்தக் கூற்று, கடந்த ஒரு வாரமாகக் காவல்துறையினரும் அண்டை வீட்டாரும் சேகரித்த விவரங்களுக்கு முரணாக உள்ளது.

