கான்பூர்: காவல்துறை அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து இணைய மோசடியில் ஈடுபட முயன்றவரையே ஏமாற்றி, அவரிடமிருந்து ரூ.10,000 பறித்துள்ளார் கான்பூரைச் சேர்ந்த இளையர் ஒருவர்.
பூபேந்திர சிங் எனும் அந்த இளையரிடம், காவல்துறை அதிகாரி என்று கூறி மோசடிக்காரர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். பூபேந்திர சிங்கிடம் உமது மோசமான காணொளிகள் என்னிடம் உள்ளன என்றும் அபராதம் செலுத்தாவிட்டால் அதனை வெளியிட்டுவிடுவேன் என்றும் அவர் மிரட்டியிருக்கிறார்.
ஆடவரை மோசடிக்காரர்தான் என அறிந்த பூபேந்திரா, அவரை ஏமாற்ற முடிவுசெய்தார். புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என மோசடிக்காரரிடம் கெஞ்சிய பூபேந்திரா, தனது தாய்க்குத் தெரிந்துவிடக் கூடாது என மன்றாடினார்.
இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்றால் ரூ.16,000 லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்று மோசடிக்காரர் கூறினார். அதற்கு பூபேந்திரா, தனது தாயின் தங்கச் சங்கிலி அடகுக் கடையில் இருப்பதால், 3,000 ரூபாய் கொடுத்தால் அதனைத் திரும்பப்பெற்று மீண்டும் அடகு வைத்து நீங்கள் கேட்கும் தொகையைக் கொடுத்து விடுவேன் என்று கூறியிருக்கிறார்.
மோசடியாளரும் பூபேந்திராவின் நடிப்புத் திறமையால் ஏமாந்து, உடனடியாக ரூ.3,000 அனுப்பியிருக்கிறார்.
சற்று நேரத்தில் மீண்டும் மோசடிக்காரரை அழைத்த இளையர், நகையை மீட்க கூடுதலாகப் பணம் தேவைப்படுவதாகக் கூறி அவரிடமிருந்து மொத்தமாக ரூ.10,000 வரை ஏமாற்றியிருக்கிறார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மோசடிக்காரர், பூபேந்திராவை மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, இளையர் காவல்நிலையம் சென்று , மோசடிக்காரர்மீது புகார் அளித்து, அவரிடமிருந்து பெற்ற ரூ.10,000 பணத்தையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.