பெங்களூரு: பெங்களூருவின் எலஹங்கா பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் குமார் என்னும் ஆடவர் சில நாள்களுக்கு முன்னர் ஒரு காணொளி வெளியிட்டார்.
அந்தக் காணொளியில், ‘‘இளையர் ஒருவர் சாலையில் இரண்டு மணி நேரமாக ஒரே இடத்தில் அசையாமல் நிற்கிறார். அவர் ‘சோம்பி’ போதைப் பொருளை பயன்படுத்தியதால் உறைந்து போய் இருக்கிறார்’’ எனக் கூறியிருந்தார்.
இந்தக் காணொளி இந்திய அளவில் சர்ச்சை ஆனது. ‘சோம்பி’ போதைப்பொருள் எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்று பல கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் பெங்களூரு காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் உத்தரவின்படி, ‘சோம்பி’ போதைப் பொருளை உட்கொண்டதாக நம்பப்படும் இளையரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டது.
அதில், அவர் மது அருந்தியதும் போதைப் பொருள் பயன்படுத்தாததும் தெரிய வந்தது.
இதையடுத்து பொய்த் தகவல் பரப்பியதாக ஹேமந்த் குமாரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

