ஹர்ஷிதா பாலாஜி
'சிங்லிட்' எனப்படும் சிங்கப்பூர் இலக்கிய இயக்கம் 'நம் உலகம் அறிக' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சிங்கப்பூர் எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில், மழலையர் முதல் இளையர் வரையிலான பலரும் உள்ளூர் இலக்கியங்கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் அறிந்துகொள்ள ஏதுவாக கடந்த சனிக்கிழமையன்று இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
எழுத்தாளர் அபி கிருஷ்
இந்நிகழ்ச்சியில் தமிழ் அங்கத்தில் ஐந்து நடவடிக்கைகள் இடம்பெற்றன.
"விளையாடலாம், கட்டிபூஸ்!" என்ற முதல் நடவடிக்கையில் எழுத்தாளர் அபி கிருஷ் எழுதிய மூன்று கதைப் புத்தகங்களை வைத்து கதைநேரம், பாடல்கள், விளையாட்டுகள் என்று சிறுவர்களை மகிழச் செய்தார்.
இந்நடவடிக்கையில் கலந்துகொண்ட அனைத்துச் சிறார்களுக்கும் எழுத்தாளரின் கதைப் புத்தகங்கள் கொடுக்கப்பட்டன.
எழுத்தாளர் ஆர்த்தி ஆனந்த்
வடிவமைப்பாளரும் தமிழ் ஆர்வலருமான அனுசியா பாலன் நடத்திய 'தமிழ் வடிவ விருது' நடவடிக்கையில் தமிழில் இருக்கும் வெவ்வேறு எழுத்துருக்கள் சிறார்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. எழுத்தாளர் ஆர்த்தி ஆனந்த் எழுதிய 'வீணாவும் தொலைந்த பதக்கமும்' என்ற கதைப்புத்தகத்தை வைத்து நற்குணங்களைப் பாராட்டும் வகையில் சிறார்கள் "விருதுகளை" செய்தார்கள். சிறுவர்களின் ஆர்வத்தைத் தூண்ட, விருதுகளை செய்ய பயன்படுத்தப்பட்ட 'ஸ்டிக்கர்களில்' தமிழ் வார்த்தைகள் கேளிக்கையான எழுத்துருக்களில் அச்சிடப்பட்டிருந்தன.
கவிஞர் நெப்போலியன்
மூன்றாவது நடவடிக்கையான "இளந்தமிழ் வாசிப்பும் இன்பத்தமிழ் விளையாட்டும்" கவிஞரும் எழுத்தாளருமான நெப்போலியனால் நடத்தப்பட்டது. 12 தொடக்கப்பள்ளி மாணவர்களும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் சிங்கப்பூர் எழுத்தாளர்களின் புத்தகங்களிலிருந்து சில பக்கங்களைப் படித்தார்கள். பிறகு, அவர்கள் தமிழ் வார்த்தைகளைத் தொடர்புபடுத்தும் விளையாட்டை விளையாடினார்கள்.
தங்கமுனை விருது வென்றவர்கள்
"தங்கமுனைத் தருணங்கள்" நடவடிக்கையில் தங்கமுனை விருது 2021 வெற்றியாளர்கள் சிலர் தங்கள் வெற்றிப் படைப்புகளைப் பற்றி பகிர்ந்துகொண்டு மற்ற எழுத்தாளர்களுடனும் பார்வையாளர்களுடனும் கலந்துரையாடினார்கள். கவிதை, சிறுகதை போன்றவற்றை எழுதி படைப்பதை பற்றியும் தங்கமுனை அங்கீகாரம் அவர்களுக்கு அளித்த ஊக்கத்தை பற்றியும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர். இத்துடன், புத்தக வாசிப்பின் பயன்களையும் அவர்கள் எடுத்துக்கூறினர்.
எழுத்தாளர் லதா
இறுதியாக, தமிழ் அங்கத்தை நிறைவுசெய்யும் வகையில் உள்ளூர் எழுத்தாளர் லதாவுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. தனது படைப்புகளைப் பற்றியும், இக்காலத்தில் இலக்கியம் படைப்பதற்குத் தேவையானவை பற்றியும் அவர் கூறினார். மேலும், நிகழ்வுகளையும் கற்பனையையும் உலகப் பிரச்சினைகளுடன் படைப்பில் பிரதிபலிக்கும் திறன் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார்.

