2026ஆம் ஆண்டு மார்ச் மாதக் கடைசி வரை சிங்கப்பூரர்கள் இலவசமாக நீண்டகால அதிகாரப் பத்திரத்தைப் (Lasting Power of Attorney) பதிவுசெய்து கொள்ளலாம். ஒருவர் தனது மனத்திறனை இழந்து, சுயமாக முடிவுகளை எடுக்க இயலாத ஒரு சூழ்நிலையில், அவர் தனக்குப் பதிலாக வேறொருவரிடம் முடிவுகளை எடுக்கும் பொறுப்பை சட்டப்படி ஒப்படைக்கும் விதமாக இந்தப் பத்திரம் செயல்படும்.
இதற்கு முன்னர் பொதுமக்கள் கையேடு வடிவத்தில் பத்திரத்தைப் பதிவு செய்தனர்.
இதனால், எழுத்துப் பிழைகள், குறிப்பாக முதியவர்களிடத்தில் அதிகரித்தது.
அதன் காரணமாகவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், கடந்த நவம்பரில் இருந்து இச்சேவை எளிதான வடிவில் இணையப் பதிவாக மாறியது.
மக்கள்தொகை மூப்படைந்துவரும் நம் நாட்டில் முதியவர்கள் மறதிநோய், பக்கவாதம் போன்ற பிணிகளால் அதிகமாக பாதிப்படைகின்றனர்.
இதன் விளைவாகத் தனிப்பட்ட நலன் தொடர்பாகவும் சொத்து விவகாரம் தொடர்பாகவும் அவர்கள் முடிவுகளை எடுக்க சிரமப்படும் சிக்கல் ஏற்படுகிறது.
முதியவர்கள் மட்டுமல்லாமல், 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் தாங்கள் நம்பும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க முன்வரலாம்.
குடும்பத்தில் ஒருவர் மனத்திறனை இழந்துவிட்டால், அக் குடும்பம் நீண்டகால அதிகாரப் பத்திரத்தைப் பதிவு செய்யாத பட்சத்தில், இதர குடும்பத்தார், துணை உத்தரவிற்குப் (Deputyship order) பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கு அதிகளவில் கட்டணம் செலுத்தவேண்டும்.
இதுபோன்ற செலவுகளைக் கட்டுப்படுத்த ஒருவர் பத்திரத்தை முன்கூட்டியே பதிவுசெய்ய ஊக்குவிக்கப்படுகிறார்.
பத்திரத்தில் இரண்டு வகைகள் உள்ளன. படிவம் ஒன்று (Form 1) மூலம், ஒருவர் பொறுப்பை ஒப்படைக்கவிருக்கும் நபரிடம், சில கட்டுப்பாடுகளோடு உரிமைகளை ஒப்படைப்பார். படிவம் இரண்டில், தனிப்பயனாக்கப்பட்ட உரிமைகள் ஒப்படைக்கப்படும்.
அதற்கான உட்பிரிவுகளை (clauses) வழக்கறிஞர் வரைவு ஒன்றை தயார் செய்ய வேண்டும். பொதுக் காப்பாளர் அலுவலகம் சிங்கப்பூரர்களுக்கு இதன் முக்கியத்துவத்தைக் கொண்டுசேர்க்கும் வகையில், சலுகையாக இலவச சேவையை நீட்டித்துள்ளது.
சாதாரண நிகழ்வில் பதிவுசெய்தால், சிங்கப்பூரர்கள் $75 கட்டவேண்டும். நிரந்தரவாசிகளுக்கு - $100, வெளிநாட்டவர்களுக்கு - $250.
சென்ற சனிக்கிழமை காலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தின் பிஜிபி மண்டபத்தில் பதிவு சேவை இடம்பெற்றது.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவை குழு 3வது முறையாக வழிநடத்திய இந்த நிகழ்வில் காலை ஒன்பது மணிக்கே பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
சமூக சேவைக் குழுவில் வழக்கறிஞர்களாக இருக்கும் தொண்டர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து, அவர்களுக்கு சேவையை ஒட்டிய சந்தேகங்களைத் தீர்த்துவைத்ததோடு, அவர்களுக்குச் சுமுகமாகப் பத்திரத்தைப் பதிவுசெய்து தந்தனர்.
சமூக சேவைச் குழுவின் தலைவரும் வழக்கறிஞருமான சுசீலா கணேசன், 52, "நீண்டகால அதிகாரப் பத்திரத்தின் அவசியத்தை சிங்கப்பூரர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். செலவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் வருமுன் காப்பதே சிறந்தது," என்றார்.
ஓய்வுபெற்ற 79 வயது சின்னையா யோகேந்திரன், தம் மனைவி 74 வயது நவசக்தி யோகேந்திரனுடன் பதிவுசெய்ய வந்திருந்தார்.
இவர்களுக்கு பிள்ளை இல்லாத நிலையில் திரு சின்னையா தம் மனைவியிடமும் தம் சகோதரன் மகனிடமும் பொறுப்பை ஒப்படைத்தார்.
சேவை மூலம் பயன்பெற்ற இந்தத் தம்பதியினர், "எங்களுக்குப் பிற்காலத்தில் ஏதோ ஒன்று நடந்துவிட்டால், பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையை இந்த சேவை வழங்கியுள்ளது," என்றனர்.
பதிவுசெய்ய வந்தவர்களில் சிலர், இதை உயில் என்று நினைத்துக் குழம்பிவிட்டனர். உயிலும் இந்தப் பத்திரமும் முற்றிலும் வேறுபட்டவை.
உயில் ஒருவர் இறந்த பிறகு செயல்படுத்தப்படும் ஒன்று. ஆனால், இந்தப் பத்திரம், ஒருவர் முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில், அவருக்குப் பதிலாக வேறொருவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என விளக்கமளித்தார், பதிவுசெய்ய உதவிய டான் லெராய் & அசோஷியேட்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர் கந்தன் ராகவேந்திரா, 38.
இது குறித்த மேல்விவரங்களுக்கு https://opg-eservice.msf.gov.sg/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.

