பல்லின சமூகமான சிங்கப்பூரில் பல தரப்பட்ட பண்பாடுகளுடன் தொடர்பில் இருப்பது தினசரி வாழ்வியலில் ஓர் அங்கம். அண்மைக்காலமாய், மேற்கத்திய, ஜப்பானிய, கொரியத் தாக்கங்களும் சமூகத்தில் பரவலாகக் காணப்படுகின்றன.
இத்தகைய நவீன சிங்கப்பூரில் உலகமயமாதலுக்கு ஈடுகொடுக்கும் அதே வேளையில், எவ்வாறு சுய அடையாளத்தைக் கட்டிக்காப்பது எனும் அடிப்படையிலான கேள்விகளை எழுப்பி தெளிந்தனர், நேற்று காலை 'பண்பாடுகள்: ஆழமும் அகலமும்' எனும் நிகழ்வில் கலந்து கொண்ட இளையர்கள்.
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் நான்காம் நிறைவாண்டை ஒட்டி நடந்தேறிய இந்நிகழ்வு, தமிழர்ப் பண்பாட்டுடன், பிற பண்பாடுகளையும் குறித்த புரிதலை இளையர்களிடத்தில் மேம்படுத்த முற்பட்டது.
ஏறக்குறைய 70 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தேசிய நூலகத்தின் 'பாசிபிலிடி' அறையில் அவர்கள் ஒன்றுகூடியிருந்தனர்.
இளையர்கள் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய அளவில், பண்பாடுகளை ஆராய்ந்தனர், கலந்துரையாடலில் பல்வேறு கண்ணோட்டங்களை முன்வைத்த பேராசிரியர் சித்ரா சங்கரன், நளினா கோபால், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் அருண் மகிழ்நன் ஆகியோர்.
உலகளவில் பண்பாடுகளின் பன்முகத்தன்மை, வரலாற்று மேற்கோள்கள், சிங்கப்பூரில் முன்னெடுக்கப்பட்ட ஆராய்ச்சி முயற்சிகள் ஆகியன குறித்த தகவல்கள் கலந்துரையாடலில் இடம்பெற்றன. "சுய அடையாளத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை இளையர்கள் இந்நிகழ்வில் தங்களின் கேள்விகள் மூலம் வெளிப்படுத்தினர்.
"தமிழ்மொழி, பண்பாடு சிங்கப்பூரில் தொடர்ந்து தழைக்கும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்தியது," என்றார் ஆய்வாளர் நளினா கோபால்.
சிங்கப்பூரை உலகின் நான்கு மிக பெரிய நாகரிகங்களின் சங்கமமாக குறிப்பிட்ட திரு அருண் மகிழ்நன், இத்தகைய ஓர் அரிய சூழலைக் கொண்டிருக்கும் உலக நாடுகள் வெகு சில என்று கூறினார்.
"இன்னொரு பண்பாட்டைப் பற்றி தெரிந்துகொள்வது இன்னோர் உலகத்துக்கான சாவியைப் பெறுவது போன்றது. இதைக் கொண்டு, மகத்தான செல்வங்களைத் திறக்கலாம்; பிரம்மாண்டமான சாத்தியங்களை உருவாக்கலாம்," என்றார் அவர்.
பல்வேறு பண்பாடுகளுக்கு இடையே பாலமாக விளங்குவது, தமிழர்ப் பண்பாடு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது என சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் முக்கிய இரு நோக்கங்களை நேற்றைய நிகழ்வு முன்னிறுத்தி பறைசாற்றியதாக தெரிவித்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான செம்பியன் சோமசுந்தரம்.
தமிழ்மொழி தங்களது வாழ்வியலுக்கு எவ்வாறு கைகொடுத்துள்ளது என 10 வல்லுநர்கள் விவரிக்கும் 'நானும் தமிழும்' எனும் காணொளித் தொகுப்பின் வெளியீட்டையும் இந்நிகழ்வு கண்டது. அடுத்த சனிக்கிழமை முதல் இக்காணொளிகள் வாரந்தோறும் மையத்தின் சமூக ஊடகத் தளங்களில் வெளியிடப்படும்.

