காலஞ்சென்ற உள்ளூர்க் கலைஞர் திரு ஆனந்த கண்ணனின் 50வது பிறந்தநாளை நினைவுகூரும் 'ஏகே50 - ஆனந்த கொண்டாட்டம்' நிகழ்ச்சிக்கு ஏகே தியேட்டர் கடந்த வியாழனன்று ஏற்பாடு செய்திருந்தது.
தெம்பனிஸ் ஹப்பில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சி, தமிழ் மொழிக்காக திரு கண்ணனின் அர்ப்பணிப்பை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைந்தது.
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆதரவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பறை இசை, நாட்டிய மணிகளின் நடனம், தொலைக்காட்சிக் கலைஞர்களின் பாடல்கள், ரவீந்திரன் நாடகக் குழுவின் நாடகப் படைப்பு ஆகிய அம்சங்கள் இடம்பெற்றன.
அவர் இல்லையென்றாலும் அனைவரின் மனங்களிலும் அவர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் என்று உள்ளூர்க் கலைஞர் திரு வடிவழகன் குறிப்பிட்டார்.
'ஊர்க்குருவி' எனும் புகழ்பெற்ற நிகழ்ச்சியை திரு கண்ணன் சுவாரசியமாகப் படைத்தது குறித்தும் பகிரப்பட்டது.
"மரபுக் கலையின் மீதான காதலால்தான் எங்களால் இவ்வளவு தூரம் பயணம் செய்ய முடிந்தது. அவர் என் அப்பா மட்டுமல்ல, என்னுடைய உயிர்த்தோழன். என்னால் அவருடன் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேச முடியும். என் சார்பிலும் அவர் தத்தெடுத்த பல பிள்ளைகளின் சார்பிலும் உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா," என்று நிகழ்வின்போது கூறினார் திரு கண்ணனின் மகளான அவா கண்ணன்.
"எதையும் தைரியமாகச் செய்யவேண்டும், புதுமையான வடிவில் நம் மரபையும் தமிழையும் பிள்ளைகளுக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பார் என் கண்ணன்," என்று கண்ணீருடன் கூறினார் ஏகே தியேட்டர் இயக்குநரும் ஆனந்த கண்ணனின் மனைவியுமான திருவாட்டி ராணி கண்ணா.
'மங்கள அணியினர்' என்ற நடனக் குழுவிலுள்ள 70 வயது பிரபா சந்திரன் சேத், திரு ஆனந்த கண்ணனின் ஊக்குவிப்பால் 60 வயதில் ஆடத் தொடங்கினார். நிகழ்வில் ஆடிய அவர், வயதை ஒரு தடையாகக் கருதாமல் ஆடுவதற்கு ஊக்குவித்த திரு கண்ணனுக்கு நன்றி கூறிக்கொண்டார்.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 26 வயது விக்னேஷ் குமார், பறை இசையில் அதிக நாட்டம் கொண்டவர். கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் 'ஹாய் நண்பா' திட்டம் மூலம் தன்னையும் பிற வெளிநாட்டு ஊழியர் நண்பர்களையும் பறை இசைக்கு ஆனந்த கண்ணன் அறிமுகப்படுத்தி இருந்தார். அவரின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் தம்மால் பறை இசை வாசிக்க முடிந்ததை எண்ணி மகிழ்ந்தார் திரு விக்னேஷ்.
நிகழ்ச்சிப் பார்வையாளர்களில் ஒருவரான 31 வயது பூஜா தேவி, சிறு வயதிலிருந்தே திரு கண்ணனின் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தவர். திரு ஆனந்த கண்ணனைப் போல ஒவ்வொருவரும் மொழிக்காக ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

