இந்தியப் பாரம்பரிய நிகழ்த்துகலைகள் தொடர்பில் சிங்கப்பூரில் நடைபெறும் ஒரே அனைத்துலகக் கருத்தரங்கான ‘இந்தியக் கலை நிகழ்ச்சிகள் மாநாடு’, வகுப்புகள், பயிலரங்குகள், விரிவுரைகள், கண்காட்சிகள், திரையிடல்களுடன் களைகட்டவுள்ளது.
அப்சரஸ் நடனக் கலையகத்தின் ஏற்பாட்டில் 14 ஆண்டுகளாக நடைபெறும் இவ்விழாவின் வல்லுநர் வகுப்புகளும், விரிவுரைகளும் செப்டம்பர் 10 முதல் 15ஆம் தேதிவரை நடைபெறுகின்றன. மேலும், செப்டம்பர் 19 முதல் 21ஆம் தேதி வரைப் பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
இவ்விழாவில் இடம்பெறும் மூன்று முக்கியக் கலை நிகழ்ச்சிகள் முதன்முறையாகச் சிங்கப்பூரில் அரங்கேறுகின்றன. அத்துடன், உலகின் பல்வேறு அரங்குகளில் மேடையேறிப் பாராட்டுகளைப் பெற்ற அப்ஸாராஸ் கலையகத்தின் நிகழ்ச்சியான ‘ஃபிளோ’ நிகழ்ச்சியும் இவ்விழாவில் அரங்கேறுகிறது. இந்திய, உள்ளூர்க் கலைஞர்கள், மிக மூத்த, இளம் கலைஞர்களின் சங்கமத்தை இந்த விழாவில் காண முடியும். இது கலை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை,” என்றார் அப்சரஸ் நடனக் கலையகத்தின் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி.
இவ்விழாவில் இடம்பெறும் மூன்று பரதநாட்டிய, இசை நிகழ்ச்சிகள், அப்சராஸ் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் ஆகியவை எஸ்பிளனேட்டில் நடைபெறவுள்ளன.
சிங்கப்பூரின் முன்னோடிக் கலைஞர்கள் சாந்தா பாஸ்கர், நீலா சத்யலிங்கம் ஆகியோர் குறித்த உரைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறுகின்றன. இந்த உரைகளுக்கு அனுமதி இலவசம்.
பிற நடன, இசை நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டுகளை சிஸ்டிக் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.