46. சு.தமிழ்ச்செல்வன்: 2015 சிங்கப்பூரின் பொன்விழா ஆண்டு. இந்த ஐம்பது ஆண்டு காலத்தில் நம் சாதனை அசாதாரணமானது! இதன் அடிப்படை மக்கள்! நாட்டு நிர்மாணம், கல்வி, சுகாதாரம், விளையாட்டு, கலை என அனைத்துத் துறைகளிலும் தடம் பதித்து வரும் நம் மக்களில் 50 பேரை இந்த ஆண்டு முழுவதும் இத்தொடர் சிறப்பிக்கிறது. இவர்கள் மூலமாக தமிழ் முரசு கடந்த காலத்தை, நிகழ்காலத்தை, எதிர்காலத்தை எண்ணிப் பார்க்கிறது. சுற்றுவட்டாரத் தீவுகளை சிங்கப்பூருடன் இணைக்கும் பாலங்களின் தரத்தை அவ்வப்போது சரிபார்த்து உறுதியாக வைத்துக்கொள்ள உதவுபவர்களில் இவரும் ஒருவர். எண்ணெய், எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றைத் தங்கு தடையின்றி நாம் பெறுவதற்கும் இவர் அயராது உழைக்கிறார். நீரில் மூழ்கிய கப்பல்களைச் செப்பனிடுவது, பல அடி ஆழத்திற்குள் உள்ள கம்பிவடங்கள் பழுதாவதைத் தவிர்ப்பது என உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான பணியைக் கடந்த 30 ஆண்டுகளாக செய்து வருகிறார் 55 வயது திரு தமிழ்ச்செல்வன் சுப்பையாபிள்ளை. ஆபத்தான வேலை இடம். சவாலான பணிகள். ஐம்பது அடி ஆழம் வரையில் பல கிலோ எடையுள்ள முக்குளிப்பு உடையுடன் நீருக்கடியில் பணியாற்றுவதை வாழ்க்கைத்தொழிலாகக் கொண்டுள்ளார் சிங்கப்பூரின் மூத்த முக்குளிப்பாளர் களில் ஒருவரான திரு தமிழ்ச்செல்வன். நீருக்கடியிலுள்ள கம்பிவடங்களைப் பழுது பார்த்தல், பாலங்களின் தூண்களைச் சோதித்தல் போன்றவை திரு தமிழ்ச்செல்வனின் பணிகளில் சில. சிங்கப்பூரையும் ஜோகூரையும் இணைக்கும் இரண்டாம் இணைப்புப் பாலம், செந்தோசா தீவுப் பாலம், ஜூரோங் தீவுப் பாலம் ஆகியவற்றின் தூண்களை நீருக்கு அடியில் உருவாக்குவதற்காக பணியில் ஈடுபட்டிருந்த திரு தமிழ்ச்செல்வன், முக்குளிப்பதை முறைப்படி கற்றுக் கொள்ளாதவர். முக்குளிப்பாளர்களுக்கான தேவை சிங்கப்பூரில் அப்போது அதிகம் என்றும் முக்குளிப்பாளராக நீச்சல் தெரிந்திருந் தால் போதும் என்றும் கூறிய அவர், "முக்குளிப்பாளராவதற்கு கல்வி கற்றிருக்கவேண்டும் என அவசியம் அன்று கிடையாது," என்றார். உயர்நிலை இரண்டு வரை படித்திருந்த திரு தமிழ்ச்செல்வன், நண்பரின் மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையில் இன்று நல்ல நிலைக்கு முன்னேறியுள்ளதாகக் கூறினார்.
SG50: நீருக்கடியில் வாழ்க்கைத் தொழில்
2 mins read
-

