இந்தியா-ஆசியான் இடையேயான பண்பாட்டுத் தொடர்புகளைப் பாராட்டும் ஆசியான்-இந்தியா இசை விழா இவ்வாண்டு மூன்றாம் ஆண்டாக நடைபெறவுள்ளது.
புதுடெல்லியின் ஆகப் பழமையான கோட்டைகளில் ஒன்றான ‘புராணா கிலா’வில் (Purana Qila), நவம்பர் 29 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை விழா நடைபெறும்.
21வது ஆசியான்-இந்தியா உச்சநிலை மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுடன் பொருந்தும் இவ்விழாவை இந்திய வெளியுறவு அமைச்சும் ‘செஹெர்’ எனும் பண்பாட்டு அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்கின்றன.
விழாவிற்குத் தலைமை விருந்தினராக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வருகையளிப்பார். அவருடன் இந்திய வெளியுறவு அமைச்சின் பிரதிநிதிகளும் 10 ஆசியான் நாடுகளின் தூதர்களும் விழாவில் கலந்துகொள்வர்.
2017 மற்றும் 2022ஆம் ஆண்டிலும் இதற்குமுன் நடைபெற்ற விழாவில் பங்கேற்றோரில் சிங்கப்பூரைச் சேர்ந்த பிரபல பாடகரும் பாடலாசிரியருமான லின்யிங், தாய்லாந்தின் மகாவ்ஹாங் போன்றோரும் உள்ளடங்குவர்.
யுனிவர்சல் மியூசிக் சிங்கப்பூருடன் பல்லுரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் பெண் சிங்கப்பூர்க் கலைஞர் என்ற பெருமை லின்யிங்கைச் சேரும்.
புதுடெல்லியில் நடக்கும் மைய நிகழ்ச்சியை அடுத்து, தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலும் விழா முதன்முறையாக நடைபெறும்.