‘ஷேப்பிங் ஹார்ட்ஸ் 2025’ எனப்படும் சிங்கப்பூரின் ஆகப்பெரிய கலைத் திருவிழா, மாற்றுத்திறனாளிகளின் கலையார்வத்தையும் கலைத்திறனையும் வெளிக்கொணர வைத்தது.
பேஃபிரண்ட் பெருவிரைவு ரயில் நிலையத்திலும் கரையோரப் பூந்தோட்டங்களிலும் சனிக்கிழமை (ஜூன் 21) நடந்தேறிய இத்திருவிழாவுக்கு வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் ஏற்பாடு செய்தது.
இவ்வாண்டு முதல்முறையாக ‘ஷேப்பிங் ஹார்ட்ஸ் 2025’ பேஃபிரண்ட் பெருவிரைவு ரயில் நிலையத்தில் நடைபெற்றது. அதோடு, இந்த ஆண்டு எஸ்ஜி60ஐ முன்னிட்டு ‘கார்டன் சிட்டி பர்ஸ்பெக்டிவ்ஸ்’ என்ற கருப்பொருளில் கண்காட்சிகளும் ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதனால், கலைப்பொருகள் அனைத்தும் சிங்கப்பூரின் வரலாறு, கலாசாரம், இயற்கையை மையமாகக் கொண்டுள்ளன.
போக்குவரத்து, கலாசார, சமூக இளையர்துறை துணை அமைச்சர், பே யாம் கெங் இவ்விழாவை தொடங்கிவைத்தார். அவருடன் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் தலைவர் லாம் ஷியோ காயும் கரையோரப் பூந்தோட்டங்களின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி ஃபிலிக்ஸ் லோவும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
“இவ்விழா ஒரு மிகப்பெரிய, அர்த்தமுள்ள நிகழ்ச்சி. இதை நான் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் வாரங்களில், சமூகத்தில் இருக்கும் மற்ற இடைவெளிகளை பற்றி அறிந்துகொண்டு, சமூக மேம்பாட்டு மன்றத்துடன் இணைந்து அவற்றை சரிசெய்ய நான் முயற்சி செய்வேன். இதன்வழி ஒன்றிணைந்த சமூகத்தை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று திரு பே கூறினார்.
“எஸ்எம்ஆர்டியுடன் இணைந்து வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் நடத்தும் இந்த அர்த்தமுள்ள நிகழ்வு மக்களை இணைப்பதிலும் மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்குவதிலும் எங்கள் பங்கை வலுப்படுத்துகிறது,” என்று கரையோரப் பூந்தோட்டங்களின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி ஃபிலிக்ஸ் லோ கூறினார்.
‘ஷேப்பிங் ஹார்ட்ஸ் 2025’ பற்றிய மேல்விவரங்களை அறிந்துகொள்ள https://shapinghearts.cdc.gov.sg இணையப்பக்கத்தை நாடலாம்.