சமூக ஆர்வலரான ஷஃபிக் அப்துல் ரகுமானைச் சந்திக்கும் பலரும் இன அடிப்படையில் அவர் இந்தியர் என்றே நினைப்பர்.
அவரது அடையாள அட்டையிலும் அவ்வாறே குறிப்பிட்டிருந்தது.
ஆனால், அது மூவாண்டுகளுக்கு முந்திய நிலைமை. இப்போது, இந்தியாவின் கேரள மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தமது கொள்ளுத் தாத்தா-பாட்டியரின் மரபையொட்டி, இப்போது ‘மலையாளி’ என, தமது அடையாள அட்டையில் இனத்தை மாற்றிக்கொண்டுள்ளார் 28 வயதான ஷஃபிக்.
சிங்கப்பூரில் மலையாளியாக இருப்பது குறித்து ஷஃபிக் உள்ளிட்ட இளையர்கள் சிலரது அனுபவம் குறித்த காணொளி, இந்திய மரபுடைமை நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய கண்காட்சியில் இடம்பெற்றுள்ள 200க்கும் மேற்பட்ட கலைப்படைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது.
சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தில் தமிழர்களுக்குப் பிறகு இரண்டாவது பெரிய இனமாகத் திகழும் மலையாளிகளின் வரலாற்றையும் கலாசாரத்தையும் கொண்டாடும் வகையில் ‘எண்டே வீடு’ எனும் கண்காட்சிக்கு இந்திய மரபுடைமை நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.
“நான் சிங்கப்பூரில் பிறந்தவன். இது என் நாடு, என் இல்லம், நான் ஒரு சிங்கப்பூரர்,” என்ற ஷஃபிக், பள்ளிக் கல்வியின்போது தமிழ்ப் பாடத்தை எடுத்துப் பயின்றவர்.
“ஆயினும், நான் மலையாளி. அதுவே எனது கலாசாரப் பின்புலம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக சிங்கப்பூர் மலையாளிச் சமூகத்தை ஆராய்ந்த மொழியியலாளர் டாக்டர் அனிதா தேவி பிள்ளை உள்ளிட்ட மலையாளிச் சமூகத்தைச் சேர்ந்த பலரது ஒத்துழைப்புடன் இந்திய மரபுடைமை நிலையம் இக்கண்காட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கண்காட்சி நான்கு கருப்பொருள்களுடன் கூடிய மண்டலங்களாக அமைக்கப்பட்டுள்ளது. அவை, இந்தியாவிலிருந்து இங்கு புலம்பெயர்ந்து, குடியேறிய மலையாளிகளின் வரலாறு, அவர்களின் பங்களிப்புகள் உள்ளிட்டவற்றைப் பறைசாற்றுகின்றன.
மலையாளிகள் திருமணத்தின்போது அணியும் பதக்கங்கள், இந்து, முஸ்லிம், சிரிய கிறிஸ்துவர், கத்தோலிக்கர் என, சமய அடிப்படையில் மலையாளிச் சமூகத்தின் பன்முகத்தன்மையை ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்துகின்றன.
சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் பன்முகத்தன்மையையும் சிங்கப்பூரில் சிறுபான்மை இனமாக விளங்கும் இந்தியச் சமூகத்திலும் சிறுபான்மையாகத் திகழும் மலையாளிகள் எப்படித் தொடர்ந்து செழித்தோங்குகின்றனர் என்பதையும் பார்வையாளர்கள் புரிந்துகொள்வர் என்று நம்புவதாக டாக்டர் அனிதா கூறினார்.
சிங்கப்பூரில் பொது விடுமுறையாக அறிவிக்கப்படாவிடினும் சிங்கப்பூர் மலையாளிகள் ஓணம் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடி வருவதை அவர் சுட்டினார்.
சீனாவில் அண்மையில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கமும் வெள்ளியும் வென்ற சாந்தி பெரேரா, சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான கான்ஸ்டன்ஸ் சிங்கம், முன்னாள் அதிபர் தேவன் நாயர் ஆகியோர் சிங்கப்பூர் மலையாளிகளில் குறிப்பிடத்தக்கவர்கள்.
“மலையாளத்தில் ‘எண்டே வீடு’ என்றால் என் வீடு என்று பொருள். இதற்குமுன் செட்டி மலாக்கா, சீக்கிய இனங்களுடன் இணைந்து செயல்பட்டு, கண்காட்சிகளை ஏற்படுத்தினோம். இம்முறை மலையாளிகளின் கதைகளையும் கண்ணோட்டங்களையும் அறிந்துகொள்ள அனைவரையும் அழைக்கிறோம். சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் பல்வேறு துணைச் சமூகங்கள் குறித்த கண்காட்சிகளின்மூலம், பன்முகத்தன்மை கொண்ட, செழுமைமிக்க கலாசாரங்கள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகளின் சிறப்பம்சங்களைக் காட்ட முடியும் என நம்புகிறோம்,” என்று இந்திய மரபுடைமை நிலையத்தின் பொது மேலாளர் மரியா பவானிதாஸ் கூறினார்.
அடுத்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதிவரை கண்காட்சி நடைபெறும். செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமைவரை, காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரை கண்காட்சியைக் காணலாம். சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் அனுமதி இலவசம்.