லோகஷிவாணி ஜெகநாதன்
கடந்த 2017ஆம் ஆண்டில், வயது முதிர்ந்த பிரெஞ்சுப் பாதிரியார் ஒருவர் தம் வாழ்க்கையின் இறுதிக் காலத்திலும் சமையல் கலைஞர் இராதாகிரிஷ்ணன் இராமையனின் சமையலைச் சுவைக்க விரும்பினார்.
அந்தப் பாதிரியாரின் விருப்பத்தை மனநிறைவுடன் நிறைவேற்றிய நினைவு திரு இராதாகிரிஷ்ணனின் மனத்திலிருந்து அகலவே இல்லை.
விருதுகளைக் காட்டிலும் இதுபோன்ற நெகிழ்ச்சியான தருணங்களே உணவுத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட ஊக்கமளிப்பதாக உள்ளன என்கிறார் 53 வயதான திரு இராதாகிரிஷ்ணன்.
மேற்கத்திய உணவு வகைகளை, குறிப்பாக பிரெஞ்சு உணவு வகைகளைச் சமைப்பதில் கைதேர்ந்தவரான இவர், அண்மையில் 18, நோரிஸ் ரோடு என்ற முகவரியில் ‘தி பிளாக் ஷீப் கஃபே’ எனும் நவீனபாணி உணவகத்தை அண்மையில் திறந்துள்ளார்.
ஷாடேக் பள்ளியில் ஈராண்டுக்காலம் பயின்று சமையற்கலையில் சான்றிதழ் பெற்றுள்ள திரு இராதாகிரிஷ்ணன், அத்துறையில் 38 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.
இவர் ஜாலான் கெலுலுட், மாயோ ஸ்திரீட், அப்பர் தாம்சன் ரோடு ஆகிய இடங்களிலும் உணவகங்களை நடத்தி வந்தார்.
இந்நிலையில், தான் மீண்டும் உணவகத் தொழிலில் ஈடுபட தன் வாடிக்கையாளர்களே காரணம் என்கிறார் திரு இராதாகிரிஷ்ணன்.
தொடர்புடைய செய்திகள்
இம்முறை முதலீட்டிற்கு வாடிக்கையாளர் ஒருவர் கைகொடுக்க, நோரிஸ் ரோட்டில் ஒரு மாதத்திற்குமுன் ‘தி பிளாக் ஷீப் கஃபே’ உணவகத்தை இவர் திறந்தார்.
வாத்துக் கால் கொன்ஃபி, மாங்காய் சல்சா போன்ற உணவுகள் இவரது உணவகத்தின் சிறப்பம்சம்.
உணவகம் நடத்துவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களால் சில நேரங்களில் மனம் துவண்டுபோனாலும், முதலீட்டாளர்களின் ஆதரவு மிகுந்த நம்பிக்கையளிப்பதாக இராதாகிரிஷ்ணன் கருதுகிறார்.
வாடிக்கையாளர்களுக்குச் சுவையான உணவுகளைச் சமைத்து வழங்கும் இவர், “பொருளியல் நோக்கில் மட்டும் இந்தத் தொழிலை நான் பார்ப்பதில்லை. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் நோக்கிலும் இதனை நான் காண்கிறேன்,” என்கிறார்.
அத்துடன், சமையற்கலைமீது இளையர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்குடன், உணவகத்தின் மேல்தளத்திலேயே ஒரு பயிற்சிக்கூடத்தை உருவாக்கி, இளம் சமையல் கலைஞர்களை உருவாக்கவும் இவர் திட்டமிட்டுள்ளார்.
இளையர்கள் சமையல் பயணத்தில் அடியெடுத்து வைக்க இது சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பது திரு இராதாகிரிஷ்ணனின் நம்பிக்கை.
sheevanyj@sph.com.sg

