சிங்கப்பூரின் நிர்மாணத்திற்கு உழைக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை வீட்டில் கொண்டாடுவது போன்ற உணர்வை அளித்தது அண்மையில் வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்களில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்.
மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ குழுமம் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கொண்டாட்டம், ஞாயிற்றுக்கிழமை (19 ஜனவரி) காலை தொடங்கி மாலை வரை செம்பவாங், கிராஞ்சி ஆகிய இரு பொழுதுபோக்கு நிலையங்களில் இடம்பெற்றன.
கால்நடைகளின் காட்சி, இலவசப் பொங்கல், பால், கரும்பு, பால் பொங்கும் காட்சி, ஆடல் பாடல் என வெளிநாட்டு ஊழியர்களின் வார இறுதி செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் இனிதாகக் கழிந்தது.
சிங்கா ரங்கோலி நிறுவனரான விஜயா மோகன் கண்ணுக்கு விருந்தளிக்கும் வண்ணம் துணி வைத்து செய்யப்பட்ட ரங்கோலியைக் காட்சிக்கு வைத்தார்.
வெளிநாட்டு ஊழியர்களை ஈடுபடுத்தும் வகையில் அவர்கள் ரங்கோலிக்கு வண்ணம் தீட்டி மகிழ்ந்தனர்.
சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகமும் மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ குழுமமும் கைகோத்து கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கொண்டாட்ட உணர்வை வழங்கின. சிங்கப்பூருக்கான இந்திய தூதரகத்தின் துணை உயர் ஆணையர் பூஜா, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஊழியர்களுக்கு அன்பளிப்புப் பைகள் வழங்கினார்.
இலவச உணவு, பொங்கல், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் இடம்பெற்றன.
“சிங்கப்பூரில் இருந்தாலும் இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வை எனக்கு இந்தக் கொண்டாட்டம் அளித்துள்ளது. வாரயிறுதி என்பதால் எங்களால் நன்கு இளைப்பாறி பொங்கல் பண்டிகையைக் கொண்டாட முடிந்தது,” என்றார் கட்டுமானத் துறையில் பணிபுரியும் ராஜேந்திரன் சந்திரசேகரன், 32.

