ஒருங்கிணைந்த உல்லாசத் தலம் எங்கிலும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வைக் கொண்டாடும் வகையில், ‘நீடித்த நிலைத்தன்மைமிக்க எதிர்காலம்’ என்பது பற்றிய ஒரு கண்காட்சி கலை அறிவியல் அரும்பொருளகத்தில் மே 31 முதல் செப்டம்பர் 14 வரை நடைபெறுகிறது.
இக்கண்காட்சியை ஒருங்கிணைந்த உல்லாசத் தலம் ‘பசுமையாவோம் எஸ்ஜி 2025’ என்ற இயக்கத்துடன் இணைந்து வழங்குகிறது.
நீடித்த நிலைத்தன்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மனிதர்களும் இயற்கையும் ஒன்றுதான் என்ற உணர்வைப் பார்வையாளர்களின் மனங்களில் விதைக்க வேண்டும் என்பதே இக்கண்காட்சியின் முதன்மையான நோக்கம்.
பார்வையாளர்கள் சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட ஆர்வமூட்டும் நடவடிக்கைகளிலும் நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று புதுமையான அனுபவத்தைப் பெறலாம்.
“கலையும் அறிவியலும் மனிதர்களின் கற்பனைத் திறனை தூண்டுவதற்கும், அவர்களது மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பெரிதும் துணைபுரிகின்றன. எனவே, இக்கண்காட்சியின்வழி நீடித்த நிலைத்தன்மைமிக்க உலகத்தை உருவாக்குவதற்கான பொறுப்புணர்வைப் பார்வையாளர்கள் உணர்வர் என்று நம்புகிறேன்,” என்று அரும்பொருளகத்தின் துணைத் தலைவர் ஹோனர் ஹார்கர் கூறினார்.
புகழ்பெற்ற தென்கொரியச் சிற்பக் கலைஞர் டோ ஹோ சோவும் அவரின் பிள்ளைகளும் இணைந்து, சிறுவர்களுக்காக உருவாக்கிய ‘ஆர்ட்லேண்ட்’ எனும் கலைப் படைப்பு, நீடித்த நிலைத்தன்மைமிக்க எதிர்காலம் பற்றிய திரைப்படத் திருவிழா உள்ளிட்ட பல களிநயமான நடவடிக்கைகளை உள்ளடக்கியது இக்கண்காட்சி.
கண்காட்சி குறித்த மேல் விவரங்களுக்கு இந்த இணையத்தளத்தை நாடலாம்: https://www.marinabaysands.com/museum/events/sustainable-futures.html