தம் அழகினால் காண்போர் யாவரையும் மயக்கும் கரையோரப் பூந்தோட்டங்களின் அழகை இனி பார்வைக் குறைபாடுள்ளோரும் உணரலாம்.
பார்வைக் குறைபாடுள்ளோரைக் கூடுதலாக ஈடுபடுத்தக்கூடிய அனுபவங்களை வழங்க கரையோரப் பூந்தோட்டங்கள், சிங்கப்பூர் கண்பார்வைக் குறைபாடுள்ளோர் சங்கம் (எஸ்ஏவிஹெச்) இணைந்து அனைத்துலக வெண்பிரம்பு தினத்தை முன்னிட்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அக்டோபர் 13ஆம் தேதி கையெழுத்திட்டன.
அதன் முதற்கட்டமாக, ‘பூ குவிமாடம்’ (Flower Dome) சுற்றிய வழிகாட்டப்பட்ட சுற்றுலாவில் பார்வைக் குறைபாடுள்ள ஏறக்குறைய 200 பேர் பங்கேற்றனர்.
அவர்களுடன் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா சுற்றுலாவில் கண்ணைக் கட்டியபடி கலந்துகொண்டார்.
பூ குவிமாடத்தினுள் நுழைவதற்கு முன்பே, எங்கு என்ன உள்ளது என்பதைத் தெரியப்படுத்தும் ‘ப்ரெய்ல்’ வழிகாட்டி நூலை அவர்கள் தொட்டுணர்ந்தனர்.
கரையோரப் பூந்தோட்டங்களின் வழிகாட்டிகள் (docents) அவர்களை தோட்டத்தினுள்ளே அழைத்துச் சென்று, செல்லும் இடமெல்லாம் தகவல்களைப் பகிர்ந்தனர்.
மரத்தை அரவணைத்து அதன் சுற்றளவை உணர்வது, ரோஸ்மேரி போன்ற நறுமணமிகுச் செடிகளை நுகர்ந்து தொட்டுப் பார்ப்பது என மற்ற நடவடிக்கைகளும் இடம்பெற்றன.
இதுபோல் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலாக்களில், ‘எஸ்ஏவிஹெச்’ பயனாளிகளுக்குப் பூ குவிமாடத்துக்கும் மேகக் காட்டுக்கும் (cloud forest) இனி அனுமதி இலவசம்.
தொடர்புடைய செய்திகள்
எதிர்காலத்தில், மேகக் காட்டிலும் மற்ற தோட்டங்களிலும் இத்தகைய சுற்றுலா இடம்பெறும். பார்வையற்றோரையே வழிகாட்டிகளாக ஈடுபடுத்துவது குறித்தும் சிந்திக்கப்பட்டுவருகிறது.
“புதிய அனுபவமாக இருந்தது. 1,000 ஆண்டுகால ஆலிவ் மரம் இருப்பதைக் கேட்டபோது, எப்படி அவ்வளவு பழமையான மரத்தை சிங்கப்பூருக்கு உயிருடன் கொண்டுவந்தார்கள் என ஆச்சரியப்பட்டேன்,” என்றார் மூன்றரை வயதில் பார்வையிழந்த மணிவண்ணன் வசீகரன், 43.
‘கூடுதலான வேலைவாய்ப்புகள் தேவை’
23 ஆண்டுகளாக உடற்பிடிப்பு சிகிச்சையாளராகப் பணியாற்றிவந்த வசீகரன், கொவிட்-19 காலத்தில் தன் வேலையை இழந்தார். எண்ணெய் உடற்பிடிப்பு, வாசனை சிகிச்சையில் நிபுணரான இவர், இன்று யாரேனும் கேட்டால் சிகிச்சை அளிக்கிறார்.
இசையிலும் திறன்மிக்க இவர், அதிபர் நட்சத்திர அறநிதித் திரட்டில் 2015ல் ஷபிருடன் பாடியுள்ளார். ‘எஸ்டிஆர் பிளைன்ட் புரொடக்ஷன்’ யூடியூப் தளத்தில் பாடல்களை பதிவேற்றுகிறார். வானொலியில் தம் குரல் ஒலிக்கவேண்டும் என்பதே இவரது ஆசை.
“பார்வையற்றோருக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பாடத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள், நிதியாதரவு அதிகரித்தால் நன்றாக இருக்கும்,” என்றார் வசீகரன்.
“பார்வையற்றோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வர்த்தகங்களை ஊக்குவிப்பது கடினமாகத்தான் இருக்கிறது. பகுதிநேர வேலைகள், தொழிற்பயிற்சிகளுடன் தொடங்கலாம். இதன்வழி இரு தரப்பினருக்கும் ஒரு புரிதல் ஏற்படும்.
“பார்வைக் குறைபாடுள்ளோருக்கு நண்பர்களும் தேவை. நாம் பார்வைக் குறைபாடுள்ளோருடன் உரையாடுகிறோமா, காப்பி அருந்துகிறோமா?” என்றார் எஸ்ஏவிஹெச் நிர்வாக இயக்குநர் முகமது ஃபையிஸ்.
நிகழ்ச்சியின் மற்றோர் அங்கமாக, பார்வைக் குறைபாடுடைய, கல்வியில் சிறந்து விளங்கும் 24 மாணவர்களுக்கு டான் சே பிங் கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.
சியன் சே அறநிறுவனம் $50,000யும் டான் சே பிங் கல்வி நிதி $67,500யும் ‘எஸ்ஏவிஹெச்’சுக்கு நன்கொடை அளித்தன.

