மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற, ‘ஹிமாலயன்’ சமர்ப்பண தியான (Himalayan Samarpan Meditation) அனுபவத்தை அளிக்கும் ‘ஜர்னி டு இன்னர் பீஸ்’ நிகழ்ச்சியில் 430க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திரு ஷிவ்கிருபானந்த் சுவாமி வழிநடத்திய இந்நிகழ்ச்சி, மனத்தெளிவு, மீள்திறன் முதலியவற்றைப் பெறுவதற்கு தியானத்தை ஒரு பாதையாகக் கையாள, தனித்துவமான வாய்ப்பை வழங்கியது.
இந்நிகழ்ச்சியில், திரு ஷிவ்கிருபானந்தர் உண்மையான யோகத்தின் சாராம்சம் பற்றிய ஆழமான நுண்ணறிவைப் பகிர்ந்துகொண்டார். மனஅமைதி அடைவதே உண்மையான யோகத்தின் நோக்கம் என்று கூறிய அவர், அது யோகாசனங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
மேலும், அவர் சமயத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையிலான வேறுபாட்டை வலியுறுத்தி, ஆன்மீகம் என்பது ஆன்மாவை நோக்கிய ஓர் உள்பயணம் என்றும் சமயம் என்பது வழிபாட்டிற்கான வழிகாட்டி என்றும் விளக்கினார்.
தியானம் என்பது உள்அமைதிக்கான தனிப்பட்ட பயிற்சி. வெளிப்புற எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஒருவருக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது என்றும் திரு ஷிவ்கிருபானந்தர் விவரித்தார்.
அமைதியையும் நேர்மறையான உணர்வுகளையும் தாங்கள் அனுபவித்ததாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தம்மிடம் கூறியதாக ‘ஹிமாலயன்’ தியான அமைப்பின் தலைவரும் ‘ஜர்னி டு இன்னர் பீஸ்’ நிகழ்ச்சியின் நிறுவனருமான சௌந்தரராஜா ரெத்னம் தமிழ் முரசிடம் கூறினார்.