வன்மம். மன்னிப்பு, இறவா வரம். யுகங்களைக் கடந்த வாழ்வின் நோக்கம் குறித்த மனப் போராட்டத்தில் தவிக்கும் பரசுராமரின் கதையை ஆராய்கிறது களரி அகாடமி படைக்கும் ‘இம்மார்ட்டல்’ (Immortal) எனும் ஆங்கில மொழி நாடகம்.
பார்கவ ராமரின் (பரசுராமர்) வாழ்க்கைப் பயணம், மகாபாரதத்தில் அவரது பங்கு, சிவனுக்கும் அவருக்கும் இடையேயான பந்தம் போன்றவற்றைச் சித்திரிக்கவுள்ளது இந்நாடகம்
இதிகாசங்களையும் தற்காப்புக் கலைகளையும் பற்றியப் புதிய கண்ணோட்டத்தில் உருவாகியுள்ள இந்நாடகம், ஸ்டாம்ஃபர்ட் கலைகள் மன்றத்தின் பிளேக் பாக்ஸில் செப்டம்பர் 20, 21ஆம் தேதிகளில் இரவில் அரங்கேறவுள்ளது.
உருமி, கட்டாரம், கோடரி, வாள், ஈட்டி, கடா என பல்வித ஆயுதங்களோடு, களரிப்பயட்டு, சிலம்பம் அடிப்படையிலான சண்டைக் காட்சிகள் நாடகத்தில் அமையவுள்ளன.
ஒன்பது ஆண்டுகள் இந்நாடகத்தை மனத்தில் சுமந்துள்ளார் ‘களரி அகாடமி’ இணை நிறுவனர் வேதகிரி கோவிந்தசாமி. 2015ல் அகாடமியைத் தொடங்கியபோது வேதகிரியின் மனதில் உதித்த நாடகம், மேடையேற இத்தனை ஆண்டுகள் எடுத்ததற்கான காரணம், உண்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி நாடகத்தில் சண்டையிடத் தேவைப்படும் பல்லாண்டுகாலப் பயிற்சியே.
ஏழு முதல் ஒன்பது ஆண்டுகள் வரை களரி அகாடமியில் பயிற்சி பெற்றோரே உலோக ஆயுதங்களைக் கொண்டு சண்டையிடவுள்ளனர். பார்கவ ராமராக நடிக்கும் ‘களரி அகாடமி’ இணை நிறுவனர் இ.ரூபனின் கைகளிலுள்ள வெட்டுத் தழும்புகள் பயிற்சியின் சான்றுகள்.
நாடகத்திற்காக வேதகிரியும் ரூபனும் லாசால் கலைக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சியெடுத்து, தம் சக நடிகர்களுக்கும் கற்பித்தனர்.
கதையை வேதகிரியும் அவரின் மனைவியும் எழுதியுள்ளனர். சண்டை இயக்குநராக ரூபனும் மேடை மேலாளராக ரூபனின் மனைவியும் செயல்படுகின்றனர். எட்டு வயதிலிருந்து 50 வயது வரையிலான 30 நடிகர்கள் நடிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
நாடகத்தைக் காண, https://www.sistic.com.sg/events/lite_immortal24 இணையத்தளத்தில் நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம்.
செப்டம்பர் 20, 21ஆம் தேதிகளில் (வெள்ளி, சனி) இரவு 7 முதல் 8.30 மணி வரை ஸ்டாம்ஃபர்ட் கலைகள் மன்றத்தில் நாடகம் அரங்கேறும்.
களரி அகாடமி
களரிப்பயட்டு, சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட வேதகிரி, கிட்டத்தட்ட 15 ஆண்டுகால அனுபவமுள்ள ரூபன் இருவரும் இணைந்து 2015ல் களரி அகாடமியைத் தொடங்கினர்.
‘வீரசிங்கம்’ எனும் தொலைக்காட்சித் தொடரிலும் களரி அகாடமி குழுவினர் நடித்துள்ளனர். இந்திய மரபுடைமை நிலையத்தின் அதிகாரத்துவத் திறப்பிலும் சண்டைக் காட்சியை வழங்கினர்.