கட்டுமானத் துறை, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் ஏறத்தாழ 14,000 பேர் வசிக்கும் எஸ்11-பிபிடி தங்குவிடுதி 1Bயில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினத்தை முன்னிட்டு கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மொத்தம் 14 புளோக்குகள் கொண்ட இவ்விடுதியில், ஒவ்வொரு புளோக்கிற்குக் கீழே ஊழியர்களுக்கு சோளப்பொறி, ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை வழங்கும் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிறு விளையாட்டுகளில் வென்றவர்களிடம் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, காவல்துறையினர் சார்பில் இணைய மோசடிகள் குறித்த விழிப்புணர்வும் சுங்கத்துறை சார்பில் விமானத்தில் சிகரெட் போன்ற பொருள்களை எடுத்துச் செல்லும் அளவீட்டு முறை குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
விடுதிவாசிகளுக்கு சிறிய மின் சாதனங்கள் வாங்கும் கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஊழியர்களுக்கு இலவசமாக ரத்த அழுத்தப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
விடுதியின் துணை மேலாளர்களில் ஒருவரான திரு விக்டர், “அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் இங்கு நடைபெறுவது வழக்கம். விளையாட்டுகள், குலுக்கல் போட்டிகள் நடைபெற்று பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. அவற்றை வைத்து விடுதிக் கடைகளில் பொருள்கள் வாங்கிக்கொள்ளலாம். தொடக்க மதிப்பாக $10 முதல் திறன்பேசி வரை பல்வேறு பரிசுகள் உள்ளன,” என்றார்.
தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் மூத்த ஒருங்கிணைப்பாளராகவும் விடுதியில் தங்கியிருக்கும் 300 ஊழியர்களுக்கு மேற்பார்வையாளராகவும் உள்ளார் திரு லெட்சுமணன் முரளிதரன்.
“கடந்த ஈராண்டுகளாக இந்த விடுதியில் வெளிநாட்டு ஊழியர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். இந்தியா உட்பட வெவ்வேறு நாடுகளில் இருந்து இங்கு வந்து வேலை செய்பவர்கள் கலகலப்பாக இருக்க இது ஒரு நல்ல வாய்ப்பு,” என்றார் அவர்.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்திலிருந்து இங்கு வந்து கட்டுமானத் துறையில் நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றும் திரு வீரசுரேந்தர், 31, “இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பலரைச் சந்திக்கும்போது, எங்கள் ஊர் திருவிழா போன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டது போன்ற ஓர் உணர்வைத் தருகிறது,” என்றார்.
திரு ஆண்டிச்சாமி பாலசுப்ரமணியன், 28, மதுரையிலிருந்து சிங்கப்பூர் வந்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன.
“இன்றும் எனக்கு வேலை இருந்தது. வேலை முடிந்து வந்த களைப்பு தெரியாமல் நண்பர்களுடன் பொழுதைக் கழித்தது, ஓய்வான அதே சமயம் குதூகலமான உணர்வாக இருக்கிறது,” என்றார்.
மின்சாரப் பணிகளை மேற்கொள்ளும் திரு சுப்பிரமணியன் அடைக்கலம், 26, “நான் இந்த விடுதிக்கு வந்து ஈராண்டுகள் ஆகின்றன. இன்று நண்பகலில் இருந்தே நிகழ்ச்சி களை கட்டியது. இங்குள்ள நண்பர்களுடன் நேரம் செலவிடுவதற்கு இது நல்வாய்ப்பாக இருக்கிறது” என்று சொன்னார்.