மின்னியல், மின்னணு சார்ந்த கழிவுகளின் அளவு சிங்கப்பூரில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 60,000 டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. இக்கழிவுகள் முறையாக அகற்றப்படாவிட்டால் அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் ஏராளம்.
மின்னணுக் கழிவுகளை அகற்றுவது மிகப் பெரிய சவாலான பணியாக உருவாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவற்றை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
'ஹங்கர் வாரியர்ஸ்' என்ற தொண்டூழியக் குழுவை நிறுவிய ஜெய்தேவ் பாலாஜி, 16, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் உணவுப் பற்றாக்குறையை முறியடிப்பதற்காகவும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
"இந்தச் சாதனங்களை மறுசுழற்சி செய்வதால் நச்சுப் பொருள்களை நிலப்பரப்பில் இருந்து விலக்கி வைக்க முடிவதோடு புதிய சாதனங்களைத் தயாரிக்கும்போது சில பாகங்களை மீண்டும் பயன்படுத்த முடிகிறது," என்று ஜெய்தேவ் கூறினார்.
அனைத்துலக இந்தியப் பள்ளியிலிருக்கும் மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள இக்குழு, பொருளாதார துணை மட்டுமன்றி ஒவ்வொருவரும் தங்களது நேரத்தையும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒதுக்க வேண்டும் என்று நம்பிக்கை கொண்டுள்ளது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் பயிலும் திருச்செல்வம் ராஜ்நிவாஸ், 23, தனது தொடக்கநிலைப் பள்ளி பருவத்திலிருந்தே மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதைப் பற்றி ஆர்வம் கொண்டவர். தனது வட்டாரத்தில் உள்ள மின்னணுக் கழிவுகளுக்கான குப்பைத்தொட்டிகளைப் பயன்படுத்தி வருகிறார் இவர்.
மின்னியல் கருவிகளைப் பழுது பார்த்துவிட்டு பழுதானாலும் அவற்றை முறையான வகையில் அப்புறப்படுத்துவதால் இயற்கை வளங்களை நம்மால் பாதுகாக்க இயலும் என்றார் ராஜ்நிவாஸ்.
தனது தொடக்கநிலைப் பள்ளியில் இதைப் பற்றிய உரைகள் நடந்தேறியதாலும் தனது குடும்பம் இதில் ஆர்வம் காட்டுவதாலும் ராஜ்நிவாசுக்கு இதைப் பற்றி சிறு வயதிலிருந்தே தெரியும். ஆனால், பலருக்கு பிளாஸ்டிக், காகிதம், உலோகம், கண்ணாடி மறுசுழற்சி பற்றி தெரிந்த அளவுக்கு மின்னணுக் கழிவுகளின் மறுசுழற்சி பற்றி தெரிவதில்லை.
இதைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க சமூக நிலையங்களில் மின்னணுக் கழிவுகளுக்கான சேகரிப்பு இயக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாம் என்றார் ராஜ்நிவாஸ்.
'ஸ்பூட்னிக்லேப்' நிறுவனத்தின் துணை நிறுவனரான சாத் சினாய், 39, மின் சாதனங்களைச் சரிசெய்வதிலும் மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதிலும் அதீத ஆர்வம் கொண்டவர்.
'இன்ஜினியரிங்குட்' என்ற அமைப்புடன் இணைந்து 'ரிமெக்கிட்' பட்டறைகளை நடத்தியுள்ளார் இவர்.
விலை அதிகமுள்ள சாதனங்களை வாங்க இயலாதோர் பழுதடைந்த சாதனங்களை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து இப்பட்டறையிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
அதேநேரம், மின்னணுக் கழிவுகளைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதே இதன் முக்கிய நோக்கமாகும். அதே அமைப்பு அறிமுகப்படுத்திய 'சால்வெஜ்கார்டன்' என்ற முனைப்பின் மூலம் பழுதான மின் சாதனங்களின் பாகங்கள் மறுபயன்பாட்டிற்கு வழிவகுக்கிறது.
"மக்கள் தங்கள் சொந்த சாதனங்களை சரிசெய்வதைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையை நாம் போக்க வேண்டும். பழுதான மின் சாதனங்களை நீங்கள் தூக்கி எறிவதற்கு முன், அவை ஏற்கெனவே உடைந்துவிட்டதால் அவற்றை ஏன் பிரித்து அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடாது?" என்று சாத் கேள்வி எழுப்பினார்.

