வெறும் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வு, 1 விழுக்காட்டளவு மனநலப் பாதிப்பு அபாயத்தை அதிகரிக்கிறது என எச்சரிக்கை மணி அடித்துள்ளது அனைத்துலக ஆய்வொன்று.
பொதுவாக, கோடைக்காலம் வந்தாலே பெரிதாக மக்கள் கவலைப்படுவது நீர்ச்சத்துக் குறைபாடு, உடல் சோர்வு பற்றித்தான்.
ஆனால், தகிக்கும் வெயில் இளையர்களின் மனத்தை அமைதியிழக்கச் செய்வதாகத் தெரியவந்துள்ளது. உலக அளவில் நடத்தப்பட்ட 23 ஆய்வுகளின் தரவுகளை மதிப்பீடு செய்ததில் இத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 5 முதல் 18 வயது வரையிலான சிறாரே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் ஆய்வு கூறும் உண்மை.
பதின்ம வயதினர் உள்ளிட்ட சிறாரின் மனநலம் வெப்பமான நாள்களில் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றும் அச்சூழல்களில் அவர்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் 1.5 விழுக்காடு உயர்வதோடு, தொடர்ச்சியான வெப்ப அலைகளின்போது இது 25 விழுக்காடு என்ற அதிர்ச்சி தரும் அளவுக்கு உயர்கிறது என்றும் ஆய்வு முடிவுகள் கண்டறிந்துள்ளன.
ஒரே ஒரு நாள் இருக்கும் வெப்பத்தைவிட, இடைவெளியில்லாமல் தொடர்ந்து நீடிக்கும் வெப்பமே அவர்கள் உள்ளத்தை கடுமையாகப் பாதிக்கின்றது.
மேலும், இந்த பாதிப்பு வெறும் எரிச்சல் அல்லது தூக்கமின்மையோடு நின்றுவிடாமல், பதற்றம், மன அழுத்தம், இன்னும் அவசர சிகிச்சைத் தேவைகள் வரை அவர்களை இழுத்துசென்றுவிடுவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் ஜாக்குலின் ஸ்டீபஃன்ஸ் பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் தீவிர வெப்ப அலைகள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டினார்.
‘‘பதின்ம வயதுப் பருவம் என்பது இயல்பாகவே மனநல வளர்ச்சியில் ஒரு முக்கியமான மற்றும் உணர்வுபூர்வமான கட்டமாகும். கடுமையான அனல் காற்று வீசுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அதனால் சீரற்ற தூக்கம், வெளிப்புற விளையாட்டுகள் தடைபடுதல், குடும்பச் சூழலில் ஏற்படும் மன அழுத்தமும் சேர்ந்து இளையர்களின் மனநிலையைப் பெரிதும் பாதிக்கின்றன,’’ என்றார் அவர்.


