தேங் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருமண மண்டபம் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பின் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) காலை மீண்டும் திறந்தது.
சிங்கப்பூர் செட்டியார்கள் கோயில் குழுமம் நிர்வகிக்கும் இக்கோயிலின் திருமண மண்டபம் 2021 முதல் கட்டுமானப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது.
சட்ட, போக்குவரத்து மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை சிறப்பு விருந்தினராக வருகையளித்து மண்டபத்தைத் திறந்து வைத்தார்.
கட்டடத்தின் இரண்டாம், மூன்றாம் மாடிகளில் அமைந்துள்ள மண்டபத்தில் மொத்தம் 750 பேர் - இரண்டாம் மாடியில் 650 பேரும் மூன்றாம் மாடியில் 100 பேரும் - அமரலாம். மின்தூக்கி வசதிகள் இருபுறமும் உண்டு.
செட்டியார் மாளிகை போல் அமைக்கப்பட்ட கட்டடத்தின் முதல் மாடியில் பலரும் அமர்ந்து விருந்து உண்ணலாம்.
“இம்மண்டபம் 1859 முதல் 1981 வரை கார்த்திகைக் கட்டாக (கார்த்திகை அன்னதானங்களுக்கு சமைத்து பரிமாறும் இடம்) இருந்தது. 1981ல் திருமண மண்டபமாக மாற்றப்பட்டது. அதன்பின், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இம்மண்டபம் அழகாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது,” என்றார் செட்டியார்கள் கோயில் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் சுப்பிரமணியம் காசி.
தேக்கு மரத்தால் செய்யப்பட்ட மணவறை, அழகான ஓவியங்கள் போன்ற மண்டபத்தின் வேலைப்பாடுகளைக் கண்டு வியந்ததாகக் கூறினார் திரு முரளி பிள்ளை.
“இம்மண்டபம் தனித்துவமிக்கது; செட்டியார் வீட்டைப் போல் அமைக்கப்பட்டது. பாரம்பரிய வடிவமைப்புடன் விதிமுறைகளுக்கு உட்பட்டுக் கட்டுவது மிகக் கடினம்,” என திரு முரளி பிள்ளை பாராட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
வசதிகுறைந்தோர்க்குச் சக்கர நாற்காலிகள், காய்கறிகள் வழங்குவது போலச் செட்டியார்கள் கோயில் குழுமம் மேற்கொண்டுள்ள அறப்பணிகள் இன, சமய, மொழி வேறுபாடுகளைத் தாண்டிச் சிங்கப்பூரர்களை ஒன்றிணைப்பதாகத் திரு முரளி பிள்ளை கூறினார்.
“இந்துக்கள் அல்லாதவர்களும் கோயில் வளாகத்தைப் பார்வையிட்டு இம்மதத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும், அதன்மூலம் நல்லிணக்கத்தை வளர்த்துச் சிங்கப்பூர் உணர்வை வலுப்படுத்தவும் இது வழிவகுக்கிறது,” என்றார் திரு பிள்ளை.
2027ல் திருமணம் செய்ய மண்டபத்துக்கு முன்பதிவு செய்வதற்காக, திறப்பு விழாவுக்கே வந்திருந்த கணேஷ் நாகமுத்து, 26, மண்டபத்தின் வடிவமைப்பு தன்னைக் கவர்ந்ததாகக் கூறினார்.
மண்டபத்துக்கு முன்பதிவுசெய்ய, அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் அலுவலகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம். அடுத்த ஆண்டுக்கான பஞ்சாங்கம் தெரிந்தபின் பதிவுகள் உறுதிசெய்யப்படும் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

