வெள்ளிநிலா குணாளன்
தமிழ் மொழி விழாவையொட்டி சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், உமறுப்புலவர் கல்வி உதவி அறங்காவல் நிதி, உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து இம்மாதம் 23ஆம் தேதியன்று உமறுப்புலவர் நினைவு அரங்கத்தை உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் படைத்தன. 2013லிருந்து நிகழ்ந்து வரும் உமறுப்புலவர் நினைவு அரங்கம் இந்த ஆண்டு சில பாகங்களாக படைக்கப்பட்டது. வீட்டில் தமிழ் பேசாததால் ஏற்படக்கூடிய பிரச் சினைகளைச் சித்திரிக்கும் ஒரு குறுநாடகம் முதலில் அரங்கேறியது.
மூன்று தலைமுறையினர் சேர்ந்து மேடையேற்றிய பெருமை அந்த நாடகத்தைச் சேரும். அதைத் தொடர்ந்து திரு சாமு வேல் துரைசிங்கம், திரு நா. ஆண்டியப்பன், திரு ப.நா.சம் சுதீன், திரு ஜோதி மாணிக்கவாசகம் ஆகியோருக்கு 'அ. நா.மெய்தீன்' விருதளிக்கப்பட்டது.
'உமறுப்புலவர்' விருது பல் லாண்டு காலமாக சிறப்பான வகையில் தமிழ்த் தொண்டாற்றி வரும் முன்னாள் நியமன நாடாளு மன்ற உறுப்பினரான திரு ஆர். தினகரனுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தின ராக வந்திருந்த நாடாளுமன்ற நாயகர் திருவாட்டி ஹலிமா யாக்கோப் தனது உரையின் போது, 44 நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்த தமிழ் மொழி விழா ஏற்பாட்டுக் குழுவிற்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மொழி என்பது பண்பாட்டுக்கும் கலாசாரத்திற்குமான பால மாக அமைகின்றது. தமிழ்ச் சமூகத்தை மட்டுமல்ல; மலாய் சமுகத் தையும் சார்ந்த இக்காலத்து இளையர்களிடையே நாளிதழ்கள் படிக்கும் பழக்கம் குறைந்து வருகின்றது. காலத்திற்கேற்ப மொழியை இளையர்களிடையே கொண்டு சேர்க்க சமூக வலைத்தளங்களும் இணையமும் உறுதுணையாக இருப்பதாகவும் திருவாட்டி ஹலிமா கூறினார்.
சிறப்புப் பேச்சாளரான வழக்கறிஞரும் மலேசிய வானொலி தொலைக்காட்சிப் படைப்பாளருமான திரு சி பாண்டிதுரை 'தமி ழோடு வாழும் தமிழ் முஸ்லிம்கள்' என்ற தலைப்பில் நகைச்சுவை யும் யதார்த்தமும் நிறைந்த ஒரு சுவாரசியமான சொற்பொழிவை ஆற்றினார். தமிழ்த்தொண்டையும் தமிழ் மணத்தையும் உலகெங்கும் பரவ உழைத்த தமிழ் முஸ்லிம் கவிஞர்களை பற்றிய ஆர்வத்தை தூண்டும் வகையில் பேசிய திரு பாண்டித்துரை முஸ்லிம், கிறிஸ் தவர், இந்து என்ற பேதம் மறைந்து தமிழ் நெறி என்ற ஒன்றே தமிழர்களின் கலாசார அடையாளமாக உள்ளதை வலியுறுத்தி தன் கருத்துகளை ஆதாரத்துடன் பார் வையாளர்களிடம் சமர்ப்பித்தார்.
நாரைக் கொண்டு மல்லிகை, முல்லை, கனகாம்பரம் என்ற கதம் பத்தைக் கட்டும்போது அந்த நாரே இப்பூக்களை இணைக்கும் ஒரு கருவியாக உள்ளது. அதே போல்தான் முஸ்லிம், கிறிஸ்தவர், இந்து என்று வேறுபட்டிருக்கும் மக்களை தமிழ்மொழி என்ற கருவி இணைக்கின்றது என்ற அழகான உதாரணத்தை முன் வைத்திருந்தார் பேச்சாளர். தமிழ் என்பது வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபட்டுள்ள ஒரு மொழி. அதன் அழகே அந்த வேற்றுமையிலுள்ள ஒற்றுமையே. ஆதலால் ஒருவர் பேசும் தமிழ் வேறுபட்டிருந்தால் அதனைக் கேலி பேசாமல் உற்சாகப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
தமிழர் நெறியைப்பற்றி விளக்கு கையில் பொதுமறையான திருக்குறளும் மாணிக்கவாசகர் கூறியதும் நபிகள் நாயகத்தின் சொல்லுக்குமிடையேயான ஒற்றுமைகளை சில எடுத்துக்காட்டுகளின் வழி விளக்கினார். தொழுவது என்பது பொதுவாக இறைவனை வணங்குவதைக் குறிக்கும் தூய தமிழ்ச் சொல் என்றும் தமிழ் முஸ்லிம்கள் தங்கள் தந்தையரை அழைக்கப் பயன் படுத்தும் அத்தா என்ற சொல்லும் தேவாரத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ள பழந்தமிழ்ச் சொல்லே என்றும் கூறினார்.
வீட்டில் பிள்ளைகளிடம் தமிழ் பேசவேண்டிய அவசியத்தை வலியுறுத்திய பேச்சாளர், பிள்ளைகள் தமிழை அரைகுறையாகப் பேசினாலும் அதை ரசித்து மேலும் சிறப் பாகப் பேச ஊக்குவிக்க வேண் டுமே தவிர அவர்களை ஏளனப்படுத்தக்கூடாது என்றும் கூறினார்.
'உமறுப் புலவர்' விருதைப் பெற்ற முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆர். தினகரன் (வலமிருந்து 6வது), சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் சங்கத்தினர், முக்கிய பிரமுகர்கள், விருது பெற்ற இதர சமூகத் தலைவர்கள் ஆகியோருடன் சிறப்பு விருந்தினரான திருவாட்டி ஹலிமா யாக்கோப் (இடமிருந்து 2வது). படம்: சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்

