சிங்கப்பூரில் 'போக்கிமான் கோ' விளையாட்டு அறிமுகமாகி சில நாட்களே ஆகியுள்ளன. அது குறித்து பல தரப்புகளிலிருந்தும் கலவையான கருத்துகள் வெளியாகிவரும் இவ்வேளையில் ஈரானில் சென்ற வெள்ளிக்கிழமை முதல் அந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டைத் தடை செய்யும் முதல் நாடாக ஈரான் இருப்பது குறிப் பிடத்தக்கது. ஈரானின் இணைய நட வடிக்கைகளைக் கண்காணித்து வரும் உயர் மன்றம் இந்த முடிவைப் பரிந்துரைத்ததாக பிபிசி தெரிவித்தது. ஈரானில் இணையப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ள நிலையில் பலர் இந்த விளையாட்டைப் பற்றிய கருத்துகளை இணையத்தில் பகிர்ந்து கொண்டனர். 'போக்கிமான் கோ' விளையாட்டை உருவாக்கிய நிறுவனத் திடம் அதில் சில மாற்றங்களைச் செய்ய ஈரான் அரசாங்கம் கோரியபோதும் அந்நிறுவனம் ஒத்துழைப்பு நல்காததால் இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதை மிகுந்த கவனத்துடன் விளையாடுமாறு மேலும் பல நாட்டு அரசாங்கங்கள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன. இந்த விளையாட்டின் காரணமாக மரணங்கள், விபத்துகள், குற்றச் செயல்கள் நடைபெற்றுள்ளதால் அதிகாரிகள் இவ்விளையாட்டுக்கு வலுவாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாகனங்கள் ஓட்டும்போது இந்த விளையாட்டில் ஈடுபடக் கூடாது என மும்பை போலிசார் அதிரடியாக அறிவித்துள்ளனர். 'போக்கிமான்'களைச் சேகரிக்கும் சுவாரசியத்தில் சிலர் நாட்டு எல்லைகடந்து சென்ற சம்பவங்களும் உள்ளன. இந்தோனீசிய போலிசார் வேலையில் இருக்கும்போது இந்த விளையாட்டில் ஈடுபடக்கூடாது என அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இந்த விளையாட்டு விரும்பிகளோ விபத்து, குற்றச் செயல்களுக்கு இந்த விளையாட்டு மட்டும் காரணமல்ல என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளனர். கடுமையான கட்டுப்பாடு களை விதிக்கலாம், ஆனால் விளையாட்டைத் தடை செய்ய வேண்டியதில்லை என்பது அவர்களின் நிலைப்பாடு.
அட்டைகளை வைத்து விளையாடும் 'போக்கிமான்' விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டபோதே அதை விளையாடக்கூடாது என சவூதி அரேபியாவில் சமய ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தர்கா ஆலா ஹஸ்ரத்திலும் இந்த விளையாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் கல்வி அமைச்சும் சிங்கப்பூர் போலிஸ் படையும் 'போக்கிமான் கோ' விளையாடுவோர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளன. பெற் றோர் பலர், "ஆபத்தான இத்தகைய விளையாட்டைத் தடை செய்யலாமே," என்று இணையம் வழியாகக் கருத்துரைத்துள்ளனர். ஆனால் விளையாட்டு ஆர்வலர்களோ விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

