இவ்வாண்டு சிறப்பாக நடந்து முடிந்த தமிழ் மொழி விழாவில் 'சங்கே முழங்கு - தாசனும் கவியும்' என்ற நடனத்தைப் பல அற்புதக் காட்சி அமைப்புகளுடன் மேடை ஏற்றியது சத்யாலயம் இசை மற்றும் நடனப் பள்ளி. புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசனின் தேன் சுவைசொட்டும் பாடல்களுக்கு ஆறு முதல் 21 வயது வரையிலான மாணவ மாணவிகள் நாட்டியம் ஆடி வந்தவர்களை மகிழ்வித்தனர்.
'சங்கே முழங்கு', 'தமிழுக்கும் அமுதென்று பேர்', 'துன்பம் நேர்கையில்', 'புதியதோர் உலகம் செய்வோம்' ஆகிய பாடல்களுக்குத் தகுந்த அபிநயம் பிடித்து பார்வையாளர் மனதைக் கொள்ளை கொண்டனர். நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக திரு ஆர். தினகரன் வருகை தந்திருந்தார். தமிழ்மொழியின் இனிமையையும் முக்கியத்துவத்தையும் மக்களிடையே கொண்டு சேர்த்தனர் நடனமணிகள்.

