சிங்கப்பூரில் முதல் முறையாக, தொடர்ச்சியாக இருபத்து எட்டு மணி நேரத்திற்கு ‘கவசம்’ எனும் நாடகத்தைப் படைக்கவுள்ளது அதிபதி நாடகக்குழு. சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவையொட்டி, கடந்த நூறு ஆண்டுகளில் சிங்கப்பூர் வரலாற்றைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கவிருக்கின்றது இந்நாடகம். 600 பக்கங்களுக்கு நீளும் இந்நாடகத்தின் வசனங்களை சுமார் அறுபது நாடகக் கலைஞர்கள் நடித்துக்காட்ட
இருக்கின்றனர்.
"கதையில் பல திருப்பங்களையும் மர்மங்களையும் சேர்த்துள்ளோம். இந்நாடகத்தின் மையக் கதாபாத்திரமான ஈசன் பிள்ளைக்கு துணையாக ஐந்து நண்பர்கள் அவருடன் கதை முழுவதும் பயணிப்பார்கள். அவர்களின் கதைகளும் துணைக் கதைகளாக இந்நாடகத்தில் அரங்கேறும்,’ என்று கூறினார் நாடகத்தை எழுதி இயக்கியிருக்கும் திரு புகழேந்தி ராமகிருஷ்ணன்.
உலக சாதனை நூலான கின்னஸ் புத்தகத்தில் நீண்ட நேரம் அரங்கேறும் முதல் தமிழ் நாடகம் என்றும், ‘சிங்கப்பூர் புக் ஆப் ரெக்கார்ட்ஸில்‘ சிங்கப்பூரில் நீண்ட நேரம் அரங்கேறும் முதல் நாடகம் என்றும் சாதனை படைக்கவிருப்பது ‘கவசம்’ நாடகத்தின் சிறப்பம்சமாகும்.
உறக்கமின்றி 28 மணி நேரம் நடிகர்கள் தொடர்ச்சியாக நடிப்பது மிகவும் அயர்ச்சியைக் கொடுக்கும். எனவே, இந்த சவாலை எதிர்கொள்ள ஒவ்வொரு வாரயிறுதியும் தூக்கமின்றி நடிப்பதற்கான சில பயிற்சிகள் நடிகர்களுக்குக் கொடுக்கப்பட்டன. அந்த பயிற்சிகளை சனிக்கிழமை இரவு முழுவதும் செய்துமுடித்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் அவர்கள் நாடக ஒத்திகையில் மீண்டும் பயிற்சியை தொடர்ந்தார்கள்.
“இந்நாடகத்தை மேடையேற்றும் முயற்சிகளில் நான் முழுமையாக பங்குபெற வேண்டும் என்ற ஆசை இருந்ததால், தூக்கமின்றி நடிப்பது ஒரு சுமையாக தெரியவில்லை. எந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாலும் அதை சிறப்பாக செய்ய இந்த அனுபவம் கற்றுக்கொடுத்துள்ளதால் எனது தன்னம்பிக்கையும் வளர்ந்துள்ளது,” என்றார் குழுவின் ஆக மூத்த கலைஞர் திருவாட்டி செல்வராஜ் சாவித்திரி, 58.