உலகெங்கிலும் தீப்போல பரவிவரும் “ஃபேஸ்அப்” (FaceApp) செயலியைப் பயன்படுத்தி மில்லியன் கணக்கானோர் தங்களது முக பாவங்களையும் தோற்றத்தையும் மாற்றுவதோடு, பல ஆண்டுகளுக்குப் பிறகு முதுமைக்காலத்தில் எப்படி இருப்பார்கள் என்பதையும் இப்போதே ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். ஆனால், ஆர்வத் தூண்டுதலால் செயலியைப் பயன்படுத்துவோர், தங்களது புகைப்படங்களையும் பெயர்களையும் ஃபேஸ்அப் செயலி எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும், எந்தவித நோக்கத்திற்காகவும் பயன்படுத்தவும் அனுமதிக்கின்றனர்.
இதுவரை 100 மில்லியனுக்கு மேலானோர் கூகல் பிளே ஸ்டோரில் இருந்து செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதோடு, 121 நாடுகளில் ஐஓஎஸ் செயலிக் கடையில் ஃபேஸ்அப் செயலியே இப்போது உச்சத்தில் இருக்கிறது. ஃபேஸ்அப் செயலியின் சேவை விதிமுறைகளின்படி, “பயன்பாட்டாளரின் உள்ளடக்கம்” (முகம்) அவர்களுக்கே சொந்தம். ஆனால், அந்தப் படங்களை, எந்தக் கட்டணமும் இன்றி, யார் முன்னிலையிலும் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கான கால வரம்பற்ற, மாற்றப்படமுடியாத உரிமை ஃபேஸ்அப் நிறுவனத்திற்கு உள்ளது.
இதனால் ஆபத்து இல்லாதிருக்கலாம் என்றாலும், புகைப்படத்தை என்ன வேண்டுமானாலும் செய்யும் உரிமை நிறுவனத்திற்கு இருப்பது அக்கறைக்குரியது. செயலியின் உரிமையாளர் ரஷ்யாவின் “வயர்லஸ் லாப்ஸ்” நிறுவனம். செயலிகளின் வாயிலாகச் சேகரிக்கப்படும் தகவல்கள் நாம் நினைக்கும் நோக்கத்திற்கே பயன்படுத்தப்படும் என்று எண்ணிவிடமுடியாது என்கிறார் ஃபோன்அரினாவின் பீட்டர் கொஸ்டாடினொவ். சேகரிக்கப்படும் தகவல் எப்போதுமே பாதுகாப்பாகவும் அந்தரங்கமாகவும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்றும் எண்ணலாகாது.
ஃபேஸ்அப் செயலி செயல்படுவதற்கு, உங்கள் புகைப்படங்கள் அனைத்தையும் அணுகுவதற்கு நீங்கள் அனுமதியளிக்கவேண்டும். அப்போது “சிரி”, “சர்ச்” ஆகியவற்றை அணுகும் உரிமையும் செயலிக்குக் கிடைக்கும். அதோடு, பின்னணியில் தொடர்ந்து செயல்பட்டு, தகவல்களைப் புதுப்பிக்கவும் செயலிக்கு உரிமை இருப்பதால், நீங்கள் செயலியைப் பயன்படுத்தாதபோதுகூட செயலி உங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் என்கிறார் முன்னாள் ராக்ஸ்பேஸ் மேலாளர் ராப் லா கெஸ்ஸி.