மாறிவரும் தொழில்நுட்ப உலகத்தின் வேகத்திற்கு ஏற்ப ஈடுகொடுக்கும் மொழியாக தமிழ் மொழி இருக்கவேண்டும், என்ற எண்ணத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி, மாலை 6 மணிக்கு, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ‘சிகரம்’ மின் அகராதி வெளியிடப்பட்டது.
தமிழ்மொழியை தொடர்ந்து வாழும் மொழியாக இருக்கச் செய்யவும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவும் அதிகமான முன்னெடுப்புகளும் புத்தாக்கச் சிந்தனைகளும் வளர்ந்து வரும் அதே வேளையில், மொழியை தற்கால தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும் என்றது சிங்கைத் தமிழ்ச் சங்கம்.
நவீன யுகத்திற்கு ஏற்றவாறு புதிய தொழில்நுட்பத்தில் தமிழ்மொழி இருந்தால்தான் அதனை இளையர்களும் பயன்படுத்துவார்கள் என்ற நோக்கத்தில் இந்த மின் அகராதி உருவாக்கப்பட்டுள்ளது.
செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான திரு விக்ரம் நாயர் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்த மின் அகராதியை வெளியிட்டார்.
முனைவர் ரவிவேலு ‘அகரம் முதல் சிகரம் வரை’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அகராதிகள், அவற்றின் தொன்மை, தொடர்ச்சி, பயன்பாடு ஆகியவற்றைப்பற்றி எடுத்துரைத்தார்.
தமிழ்மொழியை வாழும் மொழியாகத் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்யும் பல்வேறு முயற்சிகளை சிங்கைத் தமிழ்ச் சங்கம் மேற்கொள்வதாக அதன் தலைவர் திருமதி விஜி ஜெகதீஷ் தமது உரையில் குறிப்பிட்டார்.
தமிழ் தொழில்முனைவர்களும் திறனாளர்களும் சிறந்து விளங்கும் சமூகத்தில்தான் தமிழ்மொழி பயன்பாடு தழைத்து ஓங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு, மின்னியல் தளங்களில் தமிழ்மொழியைக் கொண்டு சேர்க்கும் சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் கடப்பாட்டினை அவர் உறுதி கூறினார்.
இதுபோன்ற முன்னெடுப்புகள் தமிழ் தொழில் முனைவோருக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும் என்று வோர்ட்ஸ்மித் நிறுவனத்தின் இயக்குநர் திருமதி சுபா சுரேஷ்.
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான ‘சொல் வெல்’ போட்டியின் இறுதிச் சுற்று இயூ டீ தொடக்கப்பள்ளி, அலெக்ஸாண்ட்ரா தொடக்கப்பள்ளி, மாண்ட்ஃபர்ட் தொடக்கப்பள்ளி ஆகியவற்றுக்கிடையே நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இயூ டீ தொடக்கப்பள்ளி மாணவர்கள் வெற்றிக் கோப்பையைத் தட்டிச்சென்றனர்.
நிகழ்ச்–சி–யில் நூற்–றுக்–கும் அதி–க–மான பார்–வை–யா–ளர்–கள் கலந்து–கொண்–ட–னர்.