மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கை பாதுகாப்பு வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சில அரியவகை பறவைகள் காணப்பட்டன. அங்கு சிட்டாய் பறந்து வந்த இயற்கை புகைப்படக் கலைஞர்கள் சிலர், இந்தப் பறவைகள் கண்ணில் தென்படாதோ என ஏங்கிக் காத்திருந்தனர்.
ஃபேரி பிட்டா என்ற அரியவகை வண்ணப் பறவை வெள்ளிக்கிழமை காலை தென்பட்டது. அப்போது கழுகுகளைப் புகைப்படம் எடுப்பதற்காக ஜெலுடோங் கோபுரத்திற்குத் தமது நண்பருடன் சென்றுகொண்டிருந்த இயற்கை புகைப்படக் கலைஞர் பிரான்சிஸ் யாப், இந்தப் பறவையைக் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
அந்த ஃபேரி பிட்டா பறவையை மற்றோர் இனப் பறவையான நீல நிற பிட்டா பறவை என்று ஆரம்பத்தில் நினைத்ததாகத் திரு யாப் தெரிவித்தார். ஆனால் அந்தப் பறவையைப் புகைப்படம் எடுத்து அதனைக் கூர்ந்து ஆராய்ந்த பின், அது ஃபேரி பிட்டா பறவைதான் எனத் தெரிய வந்தது.
அருகிவரும் இந்தக் காட்டுப் பறவை இனம், காடழிப்புகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
“ஃபேரி பிட்டா பறவை வழக்கமாக தைவானிலும் சீனாவிலும் இனப்பெருக்கம் செய்யும். தெற்குத் திசைமுகமாக அவை புலம்பெயரும்போது மலேசியத் தீபகற்பம் வழியாகச் செல்லாமல் போர்னியோ வழியாகச் செல்கிறது. இந்தப் பறவையோ வழிதவறிச் சென்றிருக்கக்கூடும்,” என்றார் திரு யாப்.
ஒரு வாரத்திற்குள் காணப்பட்ட இரண்டாவது பறவை இது.
கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) ‘சினரஸ் டிட்’ இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை காணப்பட்டது. பறவையியல் ஆர்வலர் யோங் டிங் லீ, இதனை துவாஸ் வட்டாரத்தில் கண்டதாகத் தெரிவித்தார்.