சிங்கப்பூரின் முக்கிய இலக்கியப் பரிசுகளில் ஒன்றான சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 2020 அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் புத்தக மன்றம் நடத்தும் இப்போட்டிக்கு ஜனவரி 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை அனுப்பி வைக்கலாம்.
சிங்கப்பூரின் தேசிய மொழிகளான ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் மூன்று பிரிவுகளிலும் பரிசுகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் பரிசு பெறும் நூலுக்கு $10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். புதினம், கவிதை, புதினம் அல்லாதவை ஆகிய மூன்று பிரிவுகளில் 1/1/18-க்கும் 31/12/19க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அச்சில் வெளிவந்த நூல்களை போட்டிக்கு அனுப்பிவைக்கலாம்.
நூல் வடிவில் வெளிவந்தவை மட்டுமே போட்டியில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மின் நூல்கள், ஆடியோ நூல்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படா.
பலரது கவிதை, சிறுகதை, கட்டுரை தொகுப்பு நூல்களும் பலரால் எழுதப்பட்ட நூல்களும் போட்டிக்குத் தகுதி பெறாது.
மறுபதிப்புகள், மேம்படுத்தப்பட்ட பதிப்புகள், முன்னைய பதிப்புகளின் பகுதிகளைக் கொண்ட நூல்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா என்று சிங்கப்பூர் புத்தக மன்றம் தெரிவித்தது.
சிறுவர் நூல்கள், பதின்ம வயதினருக்கான நூல்களை ஹெட்விக் அனுவர் சிறுவர் நூல் விருதுக்கு அனுப்பலாம்.
தேர்வுபெற்ற நூல்களின் விவரங்கள் 2020 ஜூலை மாத இறுதியில் அறிவிக்கப்படும்.
வரும் 2020 செம்டம்பர் மாதம் நடைபெறவுள்ள விருது விழாவில் வெற்றி பெற்றோர் விவரங்கள் அறிவிக்கப்படும்.
சிங்கப்பூர் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறந்த நூல்களுக்கு அங்கீகாரம் வழங்கி, சிங்கப்பூர் இலக்கியத் திறனாளர்களை வளர்க்கும் நோக்கத்தில் இந்தப் பரிசுத் திட்டம் 1992ல் தொடங்கப்பட்டது.
மேலும் சிங்கப்பூரில் படைப்பிலக்கியத்திற்கு ஆதரவு நல்குவதையும் சிங்கப்பூர் இலக்கியத்தில் பொதுமக்களின் ஆர்வத்தைத் தூண்டுவதையும் இந்தப் பரிசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இப்போட்டி இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதுவரையில் 80க்கும் மேற்பட்டோர் சிங்கப்பூர் இலக்கியப் பரிசை வென்றுள்ளனர்.
போட்டியில், 31.12.2018ல் 18 வயது நிரம்பிய சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் பங்கேற்கலாம்.
நூலின் 4 அச்சுப்பிரதிகளுடன் சுயவிவரங்களையும் அனுப்ப வேண்டும்.
சிங்கப்பூர் இலக்கியப் பரிசு குறித்த மேல்விவரங்களுக்கு programmes@bookcouncil.sg என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். இணையத் தளம்: https://bookcouncil.sg