சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010ஆம் ஆண்டு முதல் நடத்தும் ஆனந்த பவன் உணவக முன்னாள் உரிமையாளர் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி, இவ்வாண்டு நடைபெற இருக்கிறது. அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு நாளை ஒட்டி ஆகஸ்ட் 15.08.2020 அன்று பரிசளிப்பு விழா நடைபெறும். சிறுகதை, கவிதை, கட்டுரை என மூன்று துறைகளுக்குச் சுழல் முறையில் பரிசு வழங்கப்பட்டு வருவதால் இவ்வாண்டு கவிதைத் தொகுப்பு நூலுக்குப் பரிசு வழங்கப்படும். அதனால் 2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளில் முதல் பதிப்பாகப் பதிப்பிக்கப்பட்ட தனி ஒருவரின் கவிதைத்தொகுப்பு நூல்கள் இந்தப் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.
சிங்கப்பூர்க் குடியுரிமை அல்லது நிரந்தரவாசத் தகுதி பெற்ற எழுத்தாளர்களின் கவிதைத்தொகுப்பு நூல்களாக இவை இருக்க வேண்டும். நூல்களின் 4 படிகளை விண்ணப்பப் படிவத்துடன் இந்தப் போட்டிக்கு அனுப்பி வைக்க இறுதி நாள் 15.04.2020. படிவம் இல்லாத நூல்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நூலுக்கு 2,000 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும்.