மூட்டுவலி, முழங்கால் மூட்tஉ அழற்சிக்கு மஞ்சள் சிறந்த வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படலாம் என்று ஆஸ்திரேலியாவின் டஸ்மேனியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
முழங்கால் மூட்டு அழற்சியுடைய சுமார் 70 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த முடிவு தெரியவந்துள்ளதாக அமெரிக்காவின் பிரபலமான மருத்துவ சஞ்சிகையான Annals of Internal Medicineல் ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது.
சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு நாளும் தலா இரண்டு மஞ்சள் மாத்திரைகள் வீதம் 12 வாரங்கள் வழங்கப்பட்டு, அவர்களது முழங்கால் மூட்டு அழற்சியின் வலி, வீக்கம் மற்றும் எலும்புகளில் சோதனை செய்யப்பட்டது.
எலும்புக்கட்டமைப்பில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதும் அவர்களுக்கு வேறு பக்கவிளைவுகள் இன்றி வலி குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. வேறு உடல் நலப் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு இந்த மருந்தால் ஏதும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது தெரியவில்லை.
மஞ்சளில் உள்ள Curcumin என்ற மூலக்கூறு வீக்கத்தினை கட்டுப்படுத்துவதுடன், நுண்ணிய கிருமிகளுக்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்றும் ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மஞ்சளில் உள்ள மருத்துவக்குணம், ஞாபக மறதி, மன அழுத்தம், சுவாசப்பிரச்சினைகள் ஆகியவற்றிற்கும் தகுந்த நிவாரணி என அண்மைக்காலத்தில் ஆய்வுமுடிவுகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஆசியாவில் சமைக்க மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. பழங்காலந்தொட்டே, எலும்பு முறிவு மற்றும் காயங்களால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க நல்லெண்ணெய்யில் மஞ்சள் பொடி சேர்த்து மேலே பூசுவது இந்தியர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு சிகிச்சை முறை. ஆயினும், அதிக அளவில் மஞ்சளை உட்கொள்வதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ள வேண்டும்.