- கி.ஜனார்த்தனன்
ஆறு மாத புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு 'சிங்கப்பூர் டிஸ்கவரி சென்டர்' அக்டோபர் 31ஆம் தேதி சனிக்கிழமையன்று மீண்டும் திறக்கப்பட்டது. உல்லாசமாக பொழுதைக் கழிப்பதற்கும் புதிய விவரங்களைக் கற்பதற்கும் உரிய இடமான 'டிஸ்கவரி சென்டர்' நிலையத்தில் புதிய அம்சங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன. கிருமிப் பரவலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இங்கு வருபவர்களிடம் கட்டாயம் நடைமுறைப்படுத்தப்படும்.
எக்ஸ்டி தியேட்டர் (XD Theatre)
விண்வெளியிலும் கேலிச்சித்திர உலகிலும் பயணம் செய்யும் திகிலான அனுபவத்தை வருகையாளர்கள் இதன்மூலம் பெறலாம். இவர்கள் தங்களது இருக்கைகளில் அமர்ந்தபடியே பல இடங்களுக்கு அதிவேகமாகப் பயணிப்பது போன்ற உணர்வைப் பெறுவர்.
காலத்தின் கண்ணாடி வழியாக' (Through the Lens of Time)
மெய்நிகர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களின் வழியாக சிங்கப்பூரைப் பற்றிய வரலாற்றுக் கதைகள் புத்துயிர் பெறவுள்ளன. 'காலத்தின் கண்ணாடி வழியாக' (Through the Lens of Time) என்ற அந்த அரங்கம் இன்னும் இரண்டு வாரத்தில் திறக்கப்படும். இதில் சிங்கப்பூரின் தொடக்கங்கள் (The Beginnings), திருப்புமுனை (The Turning Point), சவால்களை எதிர்த்து (Against All Odds), அடித்தளத்தை அமைத்தல் (Building Our Foundations) போன்ற நான்கு அம்சங்கள் உள்ளன.
பிளாக் லேக் வளாகம் (Black Lake Facility)
இது பல மாடிகளைக் கொண்ட 'எஸ்கேப் ரூம்' (Escape Room) எனப்படும் விளையாட்டு அறைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வோர் 'எஸ்கேப்' அறையிலிருந்தும் தப்பிக்க அந்த அறைக்குள் இருக்கும் புதிர்களைச் சரியாகச் செய்யவேண்டும். அதன்பின்னரே அந்த அறையிலிருந்து மற்றோர் அறைக்குச் செல்ல முடியும். அறிவியல் பற்றியும் கொவிட்-19 போன்ற கிருமிப்பரவலைப் பற்றியும் கற்பதற்கான வாய்ப்பை இதன் மூலம் பெறலாம்.
சஸ்டெய்னபிலிட்டி இனிஷியேட்டிவ்ஸ்
'சிங்கப்பூர் டிஸ்கவரி சென்டர்' வளாகத்திற்கு முன்புள்ள நீர்ப்பகுதியின் மீது மொத்தம் 2,325 சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூரின் நிலைத்தன்மைக்கு சுற்றுச்சூழலுக்கு ஏதுவான இத்தகைய தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. மேலும் இயற்கை எரிபொருள் வளம் அதிகம் இல்லாத சிங்கப்பூருக்கு மின்சாரம் பெறுவதற்கு இது மற்றொரு வழி.

