மின்னிலக்கமயமாக்கல் முயற்சிகள் உணவங்காடி கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தியுள்ளன. மின்னிலக்க முறைக்கு மாறியதன்மூலம் ஏற்பட்டுள்ள அனுகூலங்கள் குறித்து பயனடைந்த கடைக்காரர்கள் விவரிக்கின்றனர்.
உணவுத் துறையில் நிபுணராக சில ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்துடன், சென்ற ஆண்டு, மெக்ஸ்வெல் உணவு அங்காடி நிலையத்தில் ஒரு கடையை திரு பாஷா சிராஜ், 39, துவங்கினார். நவீனத்துவத்தையும் காய்கறிகளின் மேல் அதிக பயன்பாட்டை வளர்ப்பதையும் தமது பாரம்பரிய இந்திய உணவு தயாரிப்பில் அறிமுகப்படுத்தியுள்ளார் திரு பாஷா. அவரது தயாரிப்புகள் சற்றே மிதமான தன்மையாகவும் ஆரோக்கியம் நிறைந்த வகையிலும் புத்தாக்கத்துடனும் அமைகின்றன.
அதனால்தான் அவரது கடைக்கு லக்மியாவ் மாடர்ன் இந்தியன் குசின் என்று பெயரிட்டுள்ளார். அவரது கடையில், மதிய உணவு நேரங்களில் அதிக வியாபாரம் இருப்பதாக கூறுகிறார் திரு பாஷா.
ஆனால் கொவிட் காலத்தில் அவரது வியாபாரம் பாதிப்படைந்தது. மெக்ஸ்வெல் வட்டாரம் அதிக அலுவலக ஊழியர்களைக் கொண்ட இடமாகும். பலர் இல்லங்களிலேயே பணியாற்றியதும், சுற்றுப்பயணிகளின் வருகை தடைப்பட்டிருந்ததுமே அதன் முக்கிய காரணங்களாகும்.
கடையைத் தொடங்கிய இரண்டு மாதங்களிலேயே மின்னிலக்க கட்டண முறையை திரு பாஷா அவரது கடையில் அறிமுகப்படுத்திவிட்டார்.
கொவிட் தொற்று வராமல் இருந்திருந்தாலும், மின்னிலக்க கட்டண முறையை அவர் செயல்படுத்தியிருப்பார் என்று மேலும் கருத்துரைத்தார். அதன் செயல்முறைகள் மிகவும் சுலபமானது என்றும் பதிவிறக்கம் செய்த 5 நிமிடங்களில் கட்டணம் உறுதி செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு தயாரானது என்றும் திரு பாஷா விவரித்தார். ஒரு சில கட்டணப் பரிவர்த்தனைகளுக்குப் பிறகு, மிகவும் விரைவாக கட்டண செயல்முறையைத் தாம் கற்றுக்கொண்டுவிட்டதாக அவர் சொன்னார்.
அவரது மொத்த வாடிக்கையாளர்களில் சுமார் 25 முதல் 50 விழுக்காட்டினர் மின்னிலக்க கட்டண முறையைப் பயன்படுத்துகின்றனர்.
மிகவும் எளிமையும் சுலபமும் ஆன மின்னிலக்க கட்டண முறையை தாம் பெரிதும் விரும்புவதாகவும், சில்லறைக் கட்டணங்கள் வாங்குவதை விட இதையே ஆதரிப்பதாகவும் திரு பாஷா தெரிவித்தார்.
நேரத்தை மிச்சப்படுத்தி உற்பத்தித் திறனை வளர்க்க மின்னிலக்க கட்டண முறை உதவுகிறது. சில்லறைகளை வைத்துக்கொள்ள அவசியமில்லை. தவறான சில்லறை வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்த்துவிடலாம்.
சில்லறைக்கென்றே ஒரு ஊழியரை அமர்த்த வேண்டியதில்லை. வியாபாரம் முடிந்து வரவு செலவு கணக்குகள் செய்யத் தேவையின்றி, அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கிக் கணக்கில் நேரடியாக சென்றடைந்து விடுகின்றன. வங்கிக்குச் சென்று வியாபாரத்துக்கென்று சில்லறை மாற்றவும் அவசியமில்லை. கட்டணத்தை பற்றி கவலையின்றி, சேவைத்திறனை வளர்த்துக்கொள்ள மின்னிலக்க கட்டண முறை மிகவும் அத்தியாவசியமாகின்றது.
இத்தனை பயன்களைக் கொண்ட இந்த முறையை நிச்சயம் மற்ற கடைக்காரர்களுக்கு தாம் பரிந்துரைத்து வருவதாகவும் அவர் கூறினார்.
வாடிக்கையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் கட்டணம் செலுத்துவதில் பெரும் வசதியாக மின்னிலக்க கட்டணம் அமைந்துள்ளது என்றும் திரு பாஷா சிராஜ் (மேல் படம்) வலியுறுத்தினார்.
எளிமையான வர்த்தகப் பரிவர்த்தனை
மளிகைப் பொருள் விற்கும் கடையை ஈராண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார் 39 வயது திரு கோபால் ஜெயந்தன். பலவித மளிகைப் பொருட்களை விற்கும் இவரது கடை வாரம் ஏழு நாட்களும் திறந்திருக்கும். திங்கட்கிழமை மட்டும் அரை நாள் திறந்திருக்கும். வாரயிறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். கொவிட் கட்டுப்பாடு காலத்தில் அவரது வர்த்தகம் பெரிதும் பாதிப்படைந்தது.
கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன்னர் மின்னிலக்க கட்டண முறையை தமது கடையில் அறிமுகப்படுத்திய திரு கோபால் ஜெயந்தன், சிங்கப்பூரின் மின்னலக்கமயமாகும் முறை பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். அரசாங்கத்தின் இந்தத் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமது வாடிக்கையாளர்களில் 10 விழுக்காட்டினர், அதிலும் குறிப்பாக இளையர்களும் வெளிநாட்டு ஊழியர்களும் மின்னிலக்கக் கட்டண முறையைப் பயன்படுத்துவதாக திரு கோபால் குறிப்பிட்டார்.
மின்னிலக்க கட்டண முறை மிகவும் பாதுகாப்பானது, எளிமையானது என்ற திரு கோபால், ரொக்கத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மின்னிலக்க கட்டண முறையையே தாம் விரும்புவதாகக் கூறினார்.
“சில்லறை மாற்றி வைத்துக்கொள்ளத் தேவையில்லை, சரியாக பணத்தை வாங்கினோமா, மீதி கொடுத்தோமா என்று கணக்குப் பார்க்கத் தேவையில்லை. மேலும் சில நேரங்களில் கையில் ரொக்கப் பணம் இல்லாமல் வரும் வாடிக்கையாளர்களிடம் முன்னர் ஏடிஎம்மில் சென்று பணம் எடுத்துவரச் சொல்வேன். இதனால் வாடிக்கையாளர்களை இழக்க நேரிட்டுள்ளது. இப்போது இத்தகைய பிரச்சினைகள் இல்லை,” என்றார் அவர்.
எவ்வளவு சிறிய கடையாக இருந்தாலும் மின்னிலக்க முறையைப் பயன்படுத்துவதே சிறந்தது என்ற திரு கோபால், எல்லா வர்த்தகர்களும் வாடிக்கையாளர்களும் மின்னிலக்க முறைக்கு மாறுவதே சிறந்தது எனக் கூறினார்.
விளம்பரச் செய்தி