கொவிட்-19 காரணமாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யமுடியாவிட்டாலும் வெளிநாட்டு அனுபவத்தை மக்களுக்குக் கொண்டுவருகிறது 'டிரீம் குரூசஸ்' நிறுவனத்தின் 'வொர்ல்ட் டிரீம்' சொகுசுக் கப்பல்.
கொரியா, தாய்லாந்து நாடுகளின் பெருமைக்குரிய நவீன கலாசாரம், சிறப்பம்சங்கள் போன்றவற்றை அக்கப்பலில் மக்கள் அனுபவிக்கலாம்.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட 'வொர்ல்ட் டிரீம்' சொகுசுக் கப்பல் சென்ற ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி முதல் 'சூப்பர் சீகேஷன்' எனும் மகிழ்உலா கப்பல் பயணச் சேவையை வழங்கிவருகிறது. இவ்வாண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி வரை அந்தப் பயணங்களை சிங்கப்பூர் மக்களுக்கு வழங்கவுள்ளது.
இரண்டு, மூன்று இரவுகள் பயணங்களை மக்கள் மேற்கொள்ளலாம்.
"வொர்ல்ட் டிரீம் சொகுசுக் கப்பலின் சூப்பர் சீகேஷன் பயணங்களுக்கு சிங்கப்பூர் மக்கள் தந்த அளவுகடந்த ஆதரவு எங்களை மிகவும் உற்சாகப்படுத்தியது," என்றார் டிரீம் குரூசஸ் நிறுவனத்தின் தலைவர் திரு மைகல் கோ.
"கொவிட்-19 காலத்தில் பாதுகாப்பான, கவலை இல்லாத பயண அனுபவத்தை வழங்குவது எங்களின் நோக்கம்," என்றார் அவர்.
இம்மாதம் 21ஆம் தேதி 'ரிதம் ஆஃப் கொரியா' எனும் தென்கொரியா சார்ந்த நடவடிக்கைகள் தொடங்கின. அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை அவை நடைபெறுகின்றன.
அன்றிலிருந்து மே மாதம் 28ஆம் தேதி வரை 'அமேசிங் தாய்லாந்து' எனும் தாய்லாந்து சார்ந்த அம்சங்கள் கப்பலை அலங்கரிக்கவுள்ளன.
தாய்லாந்தின் புத்தாண்டான 'சொங்க்ரான்' விழாவை முன்னிட்டு அந்த நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர் நிறுவனத்தார்.
இந்த இரு நாடுகளும் வழக்கமாக சிங்கப்பூரர்கள் அதிகம் விரும்பும் நாடுகள் என்பதாலும் அவர்கள் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்யும் நாடுகள் என்பதாலும் அவற்றைக் கொண்டு கப்பல் பயண அட்டவணையைத் தயாரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.