அதிகமானவர்கள் கவனிக்கும் குறட்டைப் பிரச்சினை

2 mins read
06485245-ef0a-4713-a14d-64ef92c01258
படம்: ஐஏஎன்எஸ்லைஃப் -

சிங்கப்பூரில் குறட்டை விடும் பிரச்சினை பலரும் கவனித்துவரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

குறட்டை விடும் பிரச்சினைக்காக இவ்வாண்டு கூடுதலானோர் உதவி நாடியுள்ளதாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு கொவிட்-19 கிருமிப் பரவலும் ஒரு காரணம்.

அது மட்டுமல்ல, இங்கு பலரும் குறட்டை விடும் பிரச்சினையைப் பற்றி இணையத்திலும் தேடி வருகின்றனர்.

இந்த ஆண்டில் சிங்கப்பூர்வாசிகள் இணையத்தில் 139,070 முறை தேடினர். ஐயர்லாந்தின் டப்ளின் நகருக்கும் ஆஸ்திரேலியாவின் கேன்பரா நகருக்கும் பிறகு சிங்கப்பூரில்தான் அதிகமானோர் இணையத்தில் குறட்டைப் பிரச்சினை பற்றி தேடினர்.

தூக்கத்தில் மூச்சுத் திணறல் பிரச்சினை உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நான்கு மடங்கு அதிகமானதாக நுஃபீல்ட் டெண்டல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் சமிந்தராஜ் குமார் கூறினார். இந்த நிறுவனம் சிங்கப்பூரில் பத்து பல்மருந்தகங்களை நடத்திவருகிறது.

கொவிட்-19 சூழலில் வெளிநாட்டுப் பயணங்கள் குறைந்துள்ளன. இதனால் மக்கள் அதிக நேரம் வீட்டில் செலவழிக்கிறார்கள். அவர்கள் தூங்கும்போது குறட்டை விடுவதை அல்லது மூச்சுத்திணறல் ஏற்படுவதை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அதிகம் கவனிக்கிறார்கள் என்று டாக்டர் சமிந்தராஜ் குமார் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் குறட்டைப் பிரச்சினைக்காக உதவி நாடியவர்களின் எண்ணிக்கையைவிட இவ்வாண்டு 50% அதிகமானவர்கள் தங்களிடம் உதவி நாடினர் என்று மவுண்ட் எலிசபெத் மருத்துவ நிலையத்தில் காது, மூக்கு, தொண்டை, ஒவ்வாமை, குறட்டைப் பிரச்சினைகளுக்கான நிலையத்தில் நிபுணத்துவ மருத்துவராக இருக்கும் டாக்டர் பாங் யோக் டீன் கூறினார்.

மேலும், இதே காலகட்டத்தில் தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சினைக்காக தம்மிடம் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 30% உயர்ந்ததாக அவர் தெரிவித்தார். குறட்டை விடுதல் இந்த நோயின் அறிகுறிகளில் ஒன்று.

கொவிட்-19 கிருமிப் பரவலில் மக்கள் அதிகமாக வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

அவர்களின் வெளிப்புற நடவடிக்கைகள் குறைந்தன என்றும் உண்ணும் உணவின் அளவும் அதிகமானது என்றும் டாக்டர் பாங் சுட்டிக்காட்டினர்.

இதனால் உடல்பருமனும் குறிப்பாக கழுத்தில் உள்ள சதையும் அதிகரிக்கிறது. இதனால் தொண்டைக்குழாயின் மேற்பகுதியில் அழுத்தம், குறட்டைப் பிரச்சினை உருவாகிறது.

குறட்டையைத் தவிர்த்து, தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத் திணறலால் அவதிப்படுபவர்களிடம் மேலும் பல நோய் அறிகுறிகள் தென்படலாம். பகல்பொழுதில் தூங்கி விழுதல், கவனம் செலுத்தச் சிரமப்படுதல், மூச்சுத் திணறி அல்லது மூச்சை உள்ளிழுத்து திடீரென்று தூக்கத்திலிருந்து எழுதல் போன்றவை அவற்றில் அடங்கும்.