உடல்நலத்தைப் பேண போதிய நீர் அருந்துவது அவசியம். உடலின் வளர்சிதை மாற்றத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் ஒருநாளைக்கு எட்டு முதல் பத்துக் குவளை நீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நீரைச் சூடான நிலையில் அருந்துவது இன்னும் பல நன்மைகளைத் தரும்.
வெந்நீர் அருந்துவதைப் பழக்கமாக்கிக்கொள்வது ஒருவரின் உடல்நலத்திற்கு நம்ப முடியாத பல நற்பயன்களைத் தரும் என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்து.
"பாரம்பரிய, மாற்று மருத்துவ முறைகள் வெந்நீருக்கும் உடல்நலத்திற்கும் தொடர்பு இருப்பதைக் குறிப்பிடுகின்றன. அதனால், வெந்நீர் அருந்துவதைப் பழக்கமாக்கிக்கொள்வது நல்லது," என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் நித்திகா கோஹ்லி.
வெந்நீர் அருந்துவதனால் ஏற்படும் பயன்களை அவர் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுடன் பகிர்ந்துகொண்டார்.
மூக்கடைப்பிலிருந்து விடுதலை
மூக்கடைப்பு ஏற்படுவது ஒருவருக்கு எரிச்சலாகவும் அசௌகரியமாகவும் இருக்கும். சளி பிடித்துக்கொள்வதால் ஏற்படும் மோசமான பக்கவிளைவு இது.
இந்நிலையில், "ஒரு குவளை வெந்நீர் அருந்துவது மூக்கடைப்பில் இருந்து விடுவிக்கும்," என்கிறார் டாக்டர் நித்திகா.
மலச்சிக்கலைப் போக்கும்
ஒருவரின் உடலில் நீர்ச்சத்து குறைந்துபோவது மலச்சிக்கல் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று என்பது டாக்டர் நித்திகாவின் கருத்து.
"குடல் இயக்கம் மேம்பட்டு, மலச்சிக்கலில் இருந்து மீள, தண்ணீர் அல்லது வெந்நீர் அருந்துவது நல்ல வழி," என்கிறார் அவர்.
தலைமுடிக்கு நல்லது
வெந்நீர் அருந்துவதால் தலையின் மேற்தோல் வறண்டுபோகாமல் தடுக்கப்பட்டு, முடியின் ஆரோக்கியம் மேம்படும்.
வலியைக் குறைக்கும்
மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த வெந்நீர் உதவும். "அவ்வப்போது வெந்நீர் அருந்துவது மாதவிடாயின்போது ஏற்படும் வலியைக் குறைக்க உதவும்," என்கிறார் டாக்டர் நித்திகா.
தோல் பராமரிப்பு
வெந்நீர் ஒருவரது தோலில் அற்புதங்களை ஏற்படுத்தலாம்.
"வெந்நீர் அருந்துவது தோலில் சுருக்கம் விழுவதை மெதுவாக்கும்; பருக்களையும் கரும்புள்ளிகளையும் அகற்றும்," என்பது டாக்டர் நித்திகாவின் கருத்து.
செரிமானம் மேம்படும்
காலை எழுந்ததும் வெந்நீர் அருந்துவது செரிமானத்தை மேம்படுத்தும். வயிறு உப்புதல், அமிலப் பிரச்சினை, வாய்வுக் கோளாறு போன்றவற்றையும் போக்கும்.
நச்சுகளை அகற்றும்
"சூடான அல்லது மிதமான சூட்டுடன் நீர் அருந்துவது உடலில் உள்ள நச்சுகளை அகற்றும்," என்கிறார் டாக்டர் நித்திகா.

