கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒருவர் கருவுற முடியாமல் மலட்டுத்தன்மை ஏற்பட்டுவிடும் என்ற வதந்திகளை அண்மைய ஆய்வு முடிவுகள் பொய்யாக்கியுள்ளன.
கருவுறும் திறனை கொவிட்-19 தடுப்பூசி பாதிக்காது என்பதை உறுதிப்படுத்தும் அந்த ஆய்வுக் கட்டுரை 'அமெரிக்க நோய்த்தொற்றியல் சஞ்சிகை'யில் வெளியிடப்பட்டுள்ளது.
ஃபைசர்-பயோஎன்டெக், மொடர்னா அல்லது ஜான்சன் அண்ட் ஜான்சன் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட தம்பதியரிடம் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், கருவுறுதலுக்கும் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
ஆயினும், கொவிட்-19 தொற்றிய ஆண்களிடத்தில் கருவுறச் செய்யும் திறன் தற்காலிகமாகக் குறையலாம் என்பதை ஆய்வு முடிவுகள் காட்டின. அதே நேரத்தில், தடுப்பூசி போட்டுக்கொள்வதன்மூலம் அதனைத் தவிர்க்கலாம் எனக் கூறப்பட்டது.
கருவுறும் திறனைப் பாதித்துவிடலாம் என்பதே இன்னும் தாங்கள் கொவிட்-19 தடுப்பூசி போடாமல் இருக்கக் காரணம் என்று பலரும் கூறியதாகச் சொன்னார் போஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு துணைப் பேராசிரியர் டாக்டர் அமெலியா வெசலிங்க்.
"குழந்தை பெற்றுக்கொள்ள முயலும் இணையர்களிடம் ஆய்வு மேற்கொண்டோம். அதில், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும் கருவுறுதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரியவந்தது," என்றார் அவர்.
ஆய்வில் பங்கேற்றோரில் அமெரிக்கா, கனடாவைச் சேர்ந்த 2,126 பெண்களும் அடங்குவர்.
குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்களின் கருவுறு விகிதமும் தடுப்பூசி போடாத பெண்களின் கருவுறு விகிதமும் கிட்டத்தட்ட சமமாக இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.
குழந்தை பெற்றுக்கொள்ள முயலும் இணையர்களிடத்தில், ஆண் அல்லது பெண் இருவரில் எவரேனும் ஒருவர் கொவிட்-19 தடுப்பூசி போட்டிருந்தாலும் அதனால் கருவுறும் திறன் பாதிக்கப்படாது என்பதை எங்களது ஆய்வுத் தரவுகள் மறுவுறுதிப்படுத்துகின்றன," என்றார் அப்பல்கலைக்கழகத்தின் நோய்த்தொற்றியல் பேராசிரியர் டாக்டர் லாரன் வைஸ்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு மாதவிடாய் சுழற்சிக் காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. அதனால், தடுப்பூசியால் கருத்தரிப்பது என்ற அச்சம் எழுந்தது. அந்த அச்சத்தைப் போக்கவும் புதிய தரவுகள் உதவியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

