சிங்கப்பூர் உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் பல நாடுகள் மின்னியல் மோசடிகளைத் தடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. குறுந்தகவல், மின்னஞ்சல் வாட்ஸ்அப், மற்றும் பல்வேறு செயலிகள் வாயிலாக மோசடிப் பேர்வழிகள் நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோரை ஏமாற்றி அவர்களின் வாழ்நாள் சேமிப்பை சுரண்டி வருகின்றனர்.
இதுபோன்ற மோசடிக்காரர்கள் தங்கள் ஏமாற்று வேலைகளுக்கென சிறப்பான மென்பொருள் கருவிகள் எதையும் உருவாக்கவில்லை. அவர்கள் பயன்படுத்தும் முக்கால்வாசி கருவிகள் இணையத்திலேயே எளிதாகக் கிடைக்கின்றன என்கின்றனர் மென்பொருள் நிபுணர்கள். அரசாங்கத் துறைகள், வங்கிகள் அனுப்புவதைப் போன்ற அதே அடையாளங்களுடன் கூடிய போலிக் குறுந்தகவல்களை அனுப்ப இணையத்தில் கிடைக்கும் மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர் மோசடிக்காரர்கள். அக்கருவிகள் சிலவற்றுக்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. அப்படியே கட்டணம் கொடுத்து வாங்குவதாக இருந்தாலும் மிகவும் சொற்ப காசுக்குக் கிடைக்கும்.
இந்த மின்னியல் கருவிகள் மூலம் தகவல் அனுப்புநரின் தொலைபேசி எண் மறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஏதோ ஒரு பெயரில் அந்தத் தகவல் நம்மை வந்தடையும். அந்தத் தகவலுடன் ஏதேனும் இணையத்தளத்திற்கான இணைப்புக் குறியீடு இருந்து அதை நாம் சொடுக்கினால், நாம் மோசடிக்காரர்களின் வலையில் விழ வாய்ப்பு உண்டு.
இவ்வாறு பெயர்களில் உலா வரும் தகவல்களைத் தடுத்து வைத்தாலும் அதே தகவல்கள் வெவ்வேறு பெயர்களில் வந்த வண்ணம் இருக்கும். சிலசமயம் வித்தியாசமாக +44, +46, +65 என்ற எண்கள் உள்ளிட்ட பல மாறுபட்ட எண்களில் தொடங்கும் தொலைபேசி எண்களில் இருந்தும் 'குறைந்த வட்டியில் கடன் தருகிறோம்' என்பன போன்ற கவர்ச்சிமிகு வாசகங்களுடன் குறுந்தகவல்கள் வரும்.
குறுந்தகவல்களால் மட்டும் மோசடிக்காரர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டவில்லை.
ஒரு வங்கியின் இணையத் தளத்தைப் போலவே அச்சு அசலாக போலி இணையத் தளத்தை உருவாக்கி அதன் மூலம், வங்கியின் இணையப் பயனாளர்களின் விவரங்களைத் திருடி மோசடி வேலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இதுபோன்ற தந்திரமான மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கு, கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் வரும் மின்மடலில் வரும் இணைய முகவரி இணைப்புக்குறியை அழுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இயன்றவரை தாங்கள் இணையத்தில் செல்லக்கூடிய வங்கியின் முகவரியை தட்டச்சு செய்து செல்லலாம். அல்லது அந்தந்த வங்கிகளின் செயலிகளின் மூலம் இணைய வங்கிச் சேவைகளைப் பெறுவதால் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம். இருப்பினும், மின்னியல் சேவை வழங்கும் வங்கிகளின் பாதுகாப்பு மேலும் வலுவடைய வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள்.

